ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

வாரிஸ் பஞ்சாப் டி’ தலைவர் அம்ரித்பால் சிங் கைது- பஞ்சாப் போலீஸ் அதிரடி

 23 4 23

பஞ்சாப் பிரிவினைவாத அமைப்பின் தலைவனான அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாபை பிரித்து ‘காலிஸ்தான்’ என்ற பெயரில் தனி நாடு உருவாக்கும் நோக்குடன் வெளிநாடுகளில் இருந்து இன்றும் சீக்கியர்கள் பலர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங், பஞ்சாபில் இதற்கான முன்னெடுப்பை தீவிரமாக செயல்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் அம்ரித்பால் சிங் உதவியாளர் ஒருவரை கடத்தல் வழக்கில் அமிர்தசரஸ் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கத்தி மற்றும் துப்பாக்கி ஏந்திய தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை அம்ரித் பால் சிங் முற்றுகையிட்டார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில், அவர்களை தடுக்க முற்பட்ட போலீஸ் சூப்பிரெண்டு அளவிலான காவல் அதிகாரிகள் உள்பட 6 போலீசார் காயமடைந்தனர். இதனால், பஞ்சாப்பில் சட்டம் மற்றும் ஒழுங்கில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து அம்ரித்பால் சிங்கை தேடி வந்தனர்.

இந்த நிலையில், காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மார்ச் 18-ம் தேதி முதல் தேடப்பட்டு வந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் மோகாவில் சரணடைந்த அம்ரித் பால் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். அம்ரித்பால் சிங் கைதை தொடர்ந்து மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வகுப்புகளுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், கொலை முயற்சி, காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல், அரசு ஊழியர்கள் கடமையை செய்ய இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/waris-punjab-d-leader-amritpal-singh-arrested-punjab-police-action.html