செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

சம்பள உயர்வு, பதவி உயர்வு கோரி பிப்ரவரி 27 முதல் அரசு மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

 

Screenshot 2026-02-17 085412

அரசு மருத்துவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளான சம்பள உயர்வு மற்றும் காலதாமதமின்றி உரிய பதவி உயர்வு வழங்கப்படாததை கண்டித்து, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FOGDA) சார்பில் செயல்படும் அரசு மருத்துவர்களில் ஒரு பகுதியினர் கடுமையான போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கைகள் தொடர்பாக பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை தெளிவான தீர்வு அறிவிக்கப்படாததால், வரும் பிப்ரவரி 27 முதல் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை சேவைகளைத் தவிர்த்து அனைத்து வழக்கமான மருத்துவ பணிகளையும் புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். வெளிநோயாளர் பிரிவு, திட்டமிட்ட அறுவை சிகிச்சைகள், மருத்துவ முகாம்கள், நிர்வாக பணிகள் உள்ளிட்ட அனைத்தும் இந்தப் போராட்டத்தின் கீழ் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவர்களுடன் நடைபெற்ற ஆலோசனையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக சங்கத்தின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை எந்தத் தெளிவான பதிலும் கிடைக்கவில்லை என்பதால் போராட்டத்தைத் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக FOGDA ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டி. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். “எங்களுக்கு எந்த உத்தியோகபூர்வ பதிலும் வழங்கப்படவில்லை. எனவே அவசரநிலையைத் தவிர, அனைத்து வழக்கமான பணிகளையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அவசர சிகிச்சை மட்டும் தொடரும்,” என்றும் அவர் கூறினார்.

மேலும், கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் மார்ச் முதல் வாரத்தில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கவும், அதனை சாகும் வரை உண்ணாவிரதமாக தீவிரப்படுத்தவும் மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிச்சுமை அதிகரிப்பு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாதது, பதவி உயர்வில் நீண்டகால நிலுவை, ஊதிய முரண்பாடுகள், ஓய்வூதிய சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.

மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி வெளியிட்ட அரசு ஆணை (GO 354) மூலம் மருத்துவர்களின் சேவை நிபந்தனைகள் மற்றும் பதவி உயர்வு தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாகவும், அந்த ஆணையை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசு விரைந்து தலையிட்டு உரிய தீர்வு வழங்காவிட்டால், மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-government-doctors-announce-boycott-of-non-emergency-services-from-february-27-over-pay-hike-and-promotion-demands-11114742