செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

ஊழலில் வரலாற்றில் இடம்பிடித்தவர்களும் தப்பமுடியாத நிலை” – காங். விமர்சனம்!

 

சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டு ஒரு ஆண்டுக்குள் இடிந்து விழுந்த விவகாரத்தில், பாஜக ஆட்சியில் நாட்டில் ஊழல் உச்சத்தில் இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மகாராஷ்டிரா சிந்துதுர்க் மாவட்டம் மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி கடற்படை தினத்தையொட்டி பிரதமர் மோடி சிலையை திறந்து வைத்தார். இந்த 35 அடி உயரமுள்ள சிவாஜி சிலை இன்று (ஆக. 26) இடிந்து விழுந்தது. கடந்த 3 நாள்களாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், சிலை உடைந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்து, சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்த விவகாரத்தில் பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் வெளியிட்டப்பட்டுள்ள பதிவில், “பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது. 2023-ம் ஆண்டு டிசம்பர் 4 அன்று மகாராஷ்டிராவின் ராஜ்கோட்டில் சத்ரபதி சிவாஜியின் சிலையை நரேந்திர மோடி திறந்து வைத்தார். சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு தற்போது மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை இடிந்து விழுந்தது. இவர்களின் ஊழலில் வரலாற்றில் இடம்பிடித்துள்ளவர்கள் கூட தப்பமுடியாத நிலையே உள்ளது” என பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், சிலை உடைந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/shivajistatuecollapse-bjp-corruption-is-inevitable-for-those-who-have-gone-down-in-history-cong-review.html