வியாழன், 29 ஆகஸ்ட், 2024

தேர்தலில் போட்டியில்லை – மெகபூபா முஃப்தி அறிவிப்பு!

 

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் போட்டியிட போவதில்லை மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான மெகபூபா முஃப்தி அறிவித்துள்ளார்.

அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

முதல் கட்ட தேர்தல் செப்.18-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் ஆக.20-ம் தேதி தொடங்கியது.  ஆக.30-ம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். தொடர்ந்து 2ம் கட்ட தேர்தல் செப். 25-ம் தேதி மற்றும் 3ம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக். 1-ம் தேதி நடக்கிறது. மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக். 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை தேசிய மாநாட்டுக் கட்சி நேற்று வெளியிட்டது. இந்தியா கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு ஆக. 26ம் தேதி நிறைவு பெற்றது. அதன்படி, இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில் கடந்த முறை ஆட்சி செய்த கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது.  தேர்தலில் போட்டியிடாததற்கான காரணம் குறித்து  மெஹபூபா முஃப்தி தெரிவிக்கையில்..

“ இதற்கு முன்பு பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக  இருந்தபோது 12,000 பேர் மீதான வழக்குகளை ரத்து செய்ய என்னால் முடிந்தது. அதேபோல அமைதி ஒப்பந்தத்தை முதலமைச்சர் பதவியில் இருந்த என்னால் அமல்படுத்த முடிந்தது. ஆனால், இப்போது ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாறிவிட்டதால் அதன் முதலமைச்சருக்கு  எவ்வித பெரிய அதிகாரமும் இருக்காது.

முதலமைச்சர் அலுவலகத்தில் ஓர் உதவியாளரை மாற்ற வேண்டும் என்றால் கூட ஆளுநரிடம் அனுமதி கேட்க வேண்டியது இருக்கும் என்று முன்பு விமர்சித்த உமர் அப்துல்லா, இப்போது சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். எனினும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உரிய அதிகாரம் இல்லாத முதலமைச்சர் பதவியை ஏற்க எனக்கு விருப்பமில்லை. எனவே, ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை” என மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/no-contest-in-jammukashmir-elections-meghbooba-mufti-announces.html