வியாழன், 29 ஆகஸ்ட், 2024

விரைவில் ரேஷனில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

 Mano thangaraj Kannaiyakumari

தமிழ்நாட்டில், விரைவில் ஆவின் பால் பொருட்களை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. (File)

தமிழ்நாட்டில், விரைவில் ஆவின் பால் பொருட்களை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.  மேலும், சிறிய வகை பாக்கெட்டுகளில் ஆவின் நெய் உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார் . 

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் பொது மேலாளர் மற்றும் துணை பதிவாளர்கள் மாதாந்திர ஆய்வு கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) நடைபெற்றது. 

இந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:  “ஆவின் பொருட்களை தீவிர சந்தைப்படுத்துவது குறித்த உத்தரவுகள் ஆய்வுக்கூட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆவின் பொருட்களை அறிமுகம் செய்து அதனை தீவிர சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஆவின் மூலம் பாலின் அளவு குறையாத வகையில் பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் பால் பொருட்களை ரேஷன் கடையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து பகுதிகளிலும் ஆவின் பால்கள் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஆவின் பொருட்கள் கூடுதலாக விற்பனை செய்வதற்கும் புதிய ஆவின் பொருட்கள் சந்தைப்படுத்துவதற்கும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பண்டிகை காலங்களில் ஆவின் பால் பொருட்கள் சலுகை விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

மனித விபத்துகளை தடுக்கும் வகையில், ஆவின் பொருட்களை தயாரிக்க தானியங்கி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிறிய வகை பாக்கெட்டுகளில் ஆவின் நெய் (சேஷை வடிவில்) விற்பனை செய்யப்பட உள்ளது.” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-mano-thangaraj-aavin-products-will-be-sale-in-ration-shops-6934117