பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே 'நேரடி போர்' பிரகடனம்: காபூலில் குண்டுமழை: பதறவைக்கும் தற்போதைய நிலவரம்
/indian-express-tamil/media/media_files/2026/02/27/pakistan-afghanistan-war-live-updates-pakistan-declares-open-war-afghanistan-2026-02-27-12-03-37.jpg)
Pakistan Afghanistan War Live Updates | Pakistan declares open war Afghanistan
தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போர் மூண்டுள்ளது. "எங்கள் பொறுமைக்கு எல்லை மீறிவிட்டது, இது இனி நேரடிப் போர்" என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே எல்லைப் பகுதியான 'டுராண்ட் லைன்' (Durand Line) பகுதியில் இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் நிலவி வந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆப்கான் எல்லைக்குள் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. தஹ்ரீக்-இ-தாலிபான் (TTP) முகாம்களைத் தாக்கியதாக பாகிஸ்தான் கூறியது.
இதற்குப் பதிலடியாக, ஆப்கான் படைகள் பாகிஸ்தானின் எல்லைச் சாவடிகள் மீது கடுமையானத் தாக்குதல்களை நடத்தின.
இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான், இன்று காலை முதல் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது குண்டுமழை பொழியத் தொடங்கியுள்ளது.
நேரடிப் போர்: பாகிஸ்தானின் அதிரடி அறிவிப்பு
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், தனது எக்ஸ் (X) தளத்தில், "பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக ஆப்கானிஸ்தான் மாறிவிட்டது. இனி அமைதி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை, இது எங்களுக்கும் உங்களுக்குமான நேரடிப் போர்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ‘கசாப் லிப் ஹக்’ (Ghazab Lil Haq) என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவம் ஒரு மாபெரும் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
இன்று அதிகாலை முதல் ஆப்கான் தலைநகர் காபூல், கந்தகார் மற்றும் பக்தியா ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் போர் விமானங்கள் சரமாரியாகக் குண்டுகளை வீசி வருகின்றன.
F-16 விமானம் வீழ்த்தப்பட்டதா?
பாகிஸ்தானின் அமெரிக்கத் தயாரிப்பான F-16 போர் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாக ஆப்கான் படைகள் அறிவித்துள்ளன. அதன் சிதறிய பாகங்கள் அடங்கிய வீடியோவையும் அவை வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் 19 சோதனைச் சாவடிகள் மற்றும் 2 ராணுவத் தளங்களை அழித்துள்ளதாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகம் உரிமை கோரியுள்ளது.
உயிரிழப்புகள்: இரு தரப்பும் கூறும் முரண்பட்ட தகவல்கள்
போரில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து இரு நாடுகளும் வெவ்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றன:
பாகிஸ்தான் தரப்பில் 2 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஆப்கான் தரப்பில் 133 பேர் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது. மாறாக, 55 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றுள்ளதாக ஆப்கான் தெரிவிக்கிறது. (இந்தத் தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை).
சர்வதேச நாடுகளின் கவலை
முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய், "பாகிஸ்தான் தனது தவறான கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆப்கான் மக்கள் தங்கள் தாய்நாட்டைப் பாதுகாக்க ஒற்றுமையுடன் போரிடுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், இரு நாடுகளும் போரை நிறுத்தி சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரமலான் மாதத்தின் புனிதத்தைக் கருத்தில் கொண்டு, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.
டுராண்ட் லைன் என்றால் என்ன?
இது 1893-ல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வரையறுக்கப்பட்ட 2,640 கி.மீ நீளமுள்ள எல்லைக்கோடு. பாகிஸ்தான் இதை சர்வதேச எல்லையாகக் கருதுகிறது, ஆனால் ஆப்கானிஸ்தான் இதனை எப்போதும் அங்கீகரித்ததில்லை. இது பஷ்டூன் பழங்குடியினரைப் பிரிப்பதாக ஆப்கானிஸ்தான் கருதுகிறது. இந்தப் பிணக்கே இன்று ரத்தக் களரியாக மாறியுள்ளது.
எல்லைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். நிலைமை இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளதால், உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் இந்தப் போரை உற்று நோக்கி வருகின்றன.





