வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

#StopHarassment | மகாராஷ்டிராவில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

 

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் அருகே கரும்பு தோட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் கர்வீர் தாலுகா ஷியே கிராமத்தில் பீகாரை சேர்ந்த தம்பதி தங்களது 10 வயது மகளுடன் வசித்து வந்தனர். சம்பவத்தன்று சிறுமி அதிக நேரம் செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இதனால், சிறுமியின் மாமா அவளை கண்டித்தார். கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி இரவு வரை வீடு திரும்பவில்லை.

இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் மகளை தேடிப்பார்த்தும் கிடைக்காததால் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சிறுமியை தேடினர். இந்நிலையில், நேற்று காலை ராம்நகர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் ஒரு சிறுமியின் உடல் இருந்ததாக காவல்துறையிருக்கு தகவல் கிடைத்தது.


உடனே அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இது காணாமல் போன 10 வயது சிறுமியின் உடல் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் உடலை உடற்கூராய்விற்கு அனுப்பினர். இதில் சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிறுமியை கடத்தி சென்றதாக சந்தேகிக்கப்படும் 2 பேரை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


source https://news7tamil.live/a-10-year-old-girl-was-sexually-assaulted-and-killed-shocking-incident-in-kolhapur.html