புதன், 21 ஆகஸ்ட், 2024

ஆவின் தொழிற்சாலை இயந்திரத்தில் ஷால் மாட்டி இளம் பெண் உயிரிழப்பு!

 

திருவள்ளூரில் ஆவின் தொழிற்சாலையில் பணியின் போது இயந்திரத்தில் பெண்ணின் ஷால் சிக்கியதில் அவரது முடி மாட்டி தலை துண்டாகி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரை அடுத்த காக்களூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணையில் இருந்து நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 90 ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (ஆக. 20) வழக்கம்போல் பால் உற்பத்தி செய்து அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. உற்பத்தியாகி வெளியே வரும் பாலை டப்பில் அடுக்கி அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார் கார்த்தி என்பவரது மனைவி உமா ராணி (30). இவர் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரது ஷால் இயந்திரம் அருகில் உள்ள மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியது. இதனால் உமா மகேஸ்வரியின் தலை அந்த மோட்டாரில் சிக்கிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே அவர் தலை மாட்டிக்கொண்டு, துண்டாகி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் கந்தன், தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் விசாரணையில் இவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கணவர் கார்த்தி இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

காக்கலூர் பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தங்கி உமா மகேஸ்வரி ஆவின் பால் பண்ணைக்கு கடந்த ஆறு மாதமாக வேலைக்கு வந்ததுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காக்களூர் பால் பண்ணையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இதனால் ஆவின் பால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/thiruvallur-a-young-woman-died-after-getting-a-shawl-stuck-in-the-factory-machine.html