வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

அமெரிக்க #InvestorsConference | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

அமெரிக்க #InvestorsConference | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்! 30 08 2024 

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 8 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். ஆகஸ்ட். 27ம் தேதி இரவு சென்னையில் இருந்து  விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் துபாய் வழியாக நேற்று (ஆகஸ்ட் – 29ம் தேதி) அதிகாலை அமெரிக்கா சென்றடைந்தனர்.

சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் இந்திய துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது அமெரிக்க தொழிலதிபராகவும் உள்ள நெப்போலியன் மற்றும் அமெரிக்கவாழ் தமிழர்கள் வரவேற்றனர். சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் பரதநாட்டியம் உள்ளிட்ட நடனம் ஆடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், அமெரிக்க முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதுவரை இன்று (30.08.2024) 8 நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி,

  • கோவையில் ₹150 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க Yield Engineering Systems நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 300 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • சென்னையில் GeakMinds நிறுவனத்தின் ஐடி மற்றும் அனலிட்டிக்ஸ் சேவை மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் முலம் 500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • செங்கல்பட்டு மாவட்டத்தில்  ரூ. 400 கோடி மூதலீட்டில் எலக்ட்ரோலைசர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க Ohmium நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • சென்னை, தரமணியில், செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட AI-இயக்கப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைக்க Applied Materials நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • மதுரையில் ரூபாய் 50 கோடி முதலீட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் அமைக்க Infinx நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 700 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • சென்னை செம்மஞ்சேரியில் ₹250 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மையம் அமைக்க Microchip நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 1500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • சென்னையில் Paypal நிறுவனத்தின் AI மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் மூலம் 1000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இதன்படி இதுவரை மொத்தமாக சுமார் ரூ.1600 கோடி முதலீட்டில் 5100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



source https://news7tamil.live/american-investorsconference-mou-signed-with-8-companies-in-the-presence-of-chief-minister-m-k-stalin.html