தமிழ்நாடு முழுவதும் தட்டம்மை மற்றும் ருபெல்லா தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியுள்ளது. அதற்குள், புதுச்சேரி ஆரியூர் பள்ளியில் 33 மாணவ, மாணவிகள் வாந்தி மயக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ' தமிழகத்தை சோதனைக் களமாகப் பயன்படுத்துகிறது சுகாதாரத்துறை. அதற்காக 1.8 கோடி குழந்தைகளைப் பணயம் வைக்கின்றனர்' எனக் கொந்தளிக்கின்றனர் சூழல் பாதுகாப்புக்கான மருத்துவர்கள்.
தமிழ்நாடு, கர்நாடகம், கோவா, புதுச்சேரி மற்றும் லட்சத் தீவுகள் ஆகிய ஐந்து பகுதிகளில் மீசெல்ஸ்-ருபெல்லா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. 3.6 கோடி குழந்தைகளை மையமாக வைத்து தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், " தட்டம்மை, ருபெல்லா தடுப்பூசி வழங்கும் திட்டத்தில், முதல்கட்டத்திலேயே தமிழகம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ஒன்பது மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயது வரையுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தட்டம்மை மற்றும் ருபெல்லாவை இந்தத் தடுப்பூசி கட்டுப்படுத்தும். இந்தத் தடுப்பூசி குறித்து பல்வேறு வகைகளில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமான தடுப்பூசிகளைப் போன்றே இதுவும் வழங்கப்படும். இதுகுறித்து, பொதுமக்கள் பயப்பட வேண்டாம். பெற்றோர், ஆசிரியர்களுக்கு இந்தத் தடுப்பூசி குறித்த கையேடு வழங்கப்படும். இந்தத் தடுப்பூசி குறித்து, யாரேனும் தவறான தகவல் பரப்பினால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் எச்சரிக்கைத் தொனியுடன்.
சோதனைக்களமா தமிழகம்?
" மீசெல்ஸ்-ருபெல்லா தடுப்பூசி குறித்து சுகாதாரத் துறை அமைச்சரோ, அதிகாரிகளோ சொல்கின்ற கருத்துகள் ஒருபுறம் இருக்கட்டும். தற்போதுள்ள சூழலில், இந்தத் தடுப்பூசிகள் உடனடித் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. தவறான தகவல்களைப் பரப்புவது அரசின் சுகாதாரத்துறைதான் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். தமிழக அரசின் அதிகாரபூர்வ தகவலின்படி, மாநிலத்தில் தட்டம்மையால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டவர்கள் 509 பேர் என்கின்றது. ஆனால், பத்திரிகைகளில் ஆண்டுக்கு 2 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவிக்கிறது. இந்தத் தரவுகள் அறிவியல் ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்ட தரவுகள்தானா என்ற கேள்வியும் எழுகிறது" என்கிறார் சூழல் பாதுகாப்புக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்.புகழேந்தி. இவரும் கோவை மருத்துவர் ரமேஷ் ஆகியோர் இணைந்து மீசெல்ஸ்-ருபெல்லா குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பட்டியலிட்டார் புகழேந்தி,
அப்படியிருக்கும்போது, புதிதாக எம்.ஆர் தடுப்பூசி என்ற பெயரில், ஒன்பது மாதக் குழந்தையில் இருந்து 15 வயது வரை உள்ள அனைவருக்கும் ஒரே மாதத்திற்குள் 1.8 கோடி பேருக்குத் தடுப்பூசி போட வேண்டிய அவசர அவசியம் ஏன்? ' தமிழ்நாட்டைவிட, பிற மாநிலங்களில் தட்டம்மை மற்றும் ருபெல்லாவின் பாதிப்புகள் பல மடங்குகள் உள்ளன' என தரவுகள் தெரிவிக்கின்றன. அப்படியிருக்கும்போது, அதிகம் பாதிப்புக்குள்ளான பிற மாநிலங்களில் இந்தத் தடுப்பு ஊசியைப் போடாமல், தமிழ்நாட்டில் இருந்து தொடங்குவதுதான் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. ' தமிழகத்தில் தட்டம்மை நோயை உருவாக்குவதில் D8, D4, D7 ஜீனோ டைப் ஆகியவற்றைக் கொண்ட வைரஸ் கிருமிகளே பங்கு வகிக்கின்றன' என்பதை அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. ஆனால், புதிய தடுப்பூசியில் இருக்கும் வைரஸ் கிருமியோ ஜீனோடைப் A-வைச் சார்ந்ததாக உள்ளது. இந்த வேறுபாடு காரணமாக, நோய்த்தடுக்கும் திறன் எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லாமல் போக வாய்ப்பு உள்ளதை இன்பெக்ஸ்சியஸ் டிஸ்சீஸ் என்ற அறிவியல் இதழ் சுட்டிக்காட்டுகிறது. தடுப்பூசி குறித்த ஆய்வுகளை முழுமையாகப் பரிசோதித்த பிறகே, பயன்படுத்துவது அறிவார்ந்த செயலாக இருக்கும் என்பதை முன்வைக்கிறோம்.
30 நிமிட அபாயம்!
அதேபோல், மீசெல்ஸ்-ருபெல்லா தடுப்பு ஊசியால், ' காய்ச்சல், உடம்பெங்கும் செந்நிறப் புள்ளிகள் தோன்றுதல், பிளேட்லெட் அணுக்கள் குறைவது, நரம்பு மண்டல பாதிப்புக்கு உள்ளாவது (ஆட்டிசம் நோயும் இதில் அடக்கம்), மோசமான ஒவ்வாமை போன்ற பின் விளைவுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது' என்பதை உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை முன்வைக்கிறது. தடுப்பு ஊசித் துறையின் மத்திய இணை இயக்குனர் டாக்டர் பிரதீப் ஹால்தர், ' இந்தத் தடுப்பு ஊசி பொதுவாகப் பாதுகாப்பானதுதான்' என்று குறிப்பிட்டாலும், ' அதிகபட்சமாக ஐந்து சதவீதம் பேர், அதாவது நூற்றுக்கு 5 பேர் பின்விளைவுகளால் பாதிக்கப்படலாம்' என்ற கருத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் ஏப்ரல் 23, 2008-ம் ஆண்டு திருவள்ளூரில் நான்கு குழந்தைகள் தட்டம்மைத் தடுப்பு ஊசி போடப்பட்ட பிறகு இறந்து விட்டன. அதைத் தொடர்ந்து ஜூன் 17-ம் தேதியன்று இந்தியக் குழந்தைகள் நல மருத்துவர் சங்கம்(IAP), ' ஒவ்வாமை ஏற்பட்டால் அதை சரி செய்யும் கருவிகள் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், அங்கு கருவிகள் இல்லை' எனப் பதிவு செய்துள்ளது. வேதனை என்னவென்றால், சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவின் தடுப்பு ஊசி தகவல் குறிப்பிலேயே, ' ஒவ்வாமை ஏற்பட்டால் அதனை சரி செய்யத் தேவையான அட்ரினலின், ஸ்டீராய்டு, ஹிஸ்டமின் எதிர்ப்பு ஊசி மருந்துகளும் பிராணவாயுவும் அருகிலேயே தயாராக இருக்க வேண்டும்' எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஊசியைப் போட்டுக் கொண்ட அனைவரும் அடுத்த 30 நிமிடங்களுக்கு மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் அது தெரிவிக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது?
ஆட்டிசம் அபாயம்!?
1986-ம் ஆண்டில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள கார்பஸ் கிறிஸ்டி என்ற இடத்தில் இந்தத் தடுப்பு ஊசியைப் போட்டுக்கொண்டவர்களில் 99 சதவீதம் பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டனர். (ஆதாரம்: Tracy Gustafson et al, “Measles Outbreak in a Fully Immunised Secondary School Population”, NEJM 1987 316: 771-4). 1993-ம் ஆண்டு போடப்பட்ட ருபெல்லா தடுப்பு ஊசிக்குப் பின் கிரீஸ் நாட்டில் ருபெல்லா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடியதே தவிர குறையவில்லை என்ற ஆய்வுக் கட்டுரை ஒன்று 1999-ம் ஆண்டில் வந்த பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியாகி உள்ளது. 'ருபெல்லா தடுப்பு ஊசியைப் போட்டுக்கொண்ட பிறகு நாள்பட்ட மூட்டுவலி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்' என்று கிளினிக்கல் இன்பெக்சியஸ் டிஸ்சீஸ் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை நிரூபிக்கிறது. அதேபோல், ஜப்பான் அரசானது இந்தத் தடுப்பு ஊசியை அதன் முக்கியப் பின்விளைவான நான் வைரல் மெனிங்கிடிஸ்(Non Viral Meningitis) காரணமாக 1993-ம் ஆண்டில் தடை செய்தது. (ஆதாரம்: “Why Japan stopped using MMR”, 8 February, 2002). ' அமெரிக்காவில்கூட மக்களுக்கு ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்புகளில் வெறும் பத்து சதவீதம்தான் வெளிச்சத்திற்கு வந்து பதிவு செய்யப்படுகின்றது' என்று அந்த நாட்டின் நோய்த் தடுப்பு மையம்(Centre for Disease Control) கூறுகிறது.
எமனாகும் எம்.ஆர். தடுப்பூசி?
' ஒரு மக்கள் குழுவின் நூறு சதவீத மக்களும் எம்.எம்.ஆர் தடுப்பு ஊசியைப் போட்டுக்கொண்டாலும்கூட, அந்தத் தடுப்பு ஊசி அவர்களைத் தட்டம்மை–ருபெல்லாவிலிருந்து நூறு சதவீதம் பாதுகாக்காது' என்றே ஆய்வுகள் கூறுகின்றன. இது குறித்து டாக்டர் பிரதீப் ஹல்தார் கூறும்போது, ' 15 சதவீத மக்களுக்கு அது நோய் எதிர்க்கும் திறனைத் தூண்டவில்லை. 5-10 சதவீத மக்களுக்கு அது 5 ஆண்டுகளுக்குப் பின் நோய் எதிர்ப்பைக் கொடுக்கவில்லை' என்று கூறியுள்ளார். ( ஆதாரம்: Dr.Pradeep Haldhar, Deputy Commissioner, Immunisation) Union Ministry of Health, 29 January 2017). தமிழக அரசும், பத்திரிகைகளின் வாயிலாக 'ஐம்பது சதவீத ருபெல்லா நோய் தடுக்கப்படலாம்' என்றே கூறுகிறது. தடுப்பு ஊசி கொடுத்தபின் உருவாகும் நோய் எதிர்ப்புப் புரதத்தின் அளவிற்கும் நோய்த் தடுக்கும் திறனுக்கும் தொடர்பு இல்லை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. தமிழ்நாட்டில், வேலூரில் ஒன்பதாம் மாதத்தில் தட்டம்மைத் தடுப்பு ஊசி கொடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களது நான்காம் வயதின்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 66 சதவீத நபர்களுக்கு மட்டுமே நோய் எதிர்ப்புப் புரதம் அவர்களின் ரத்தத்தில் இருந்ததாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. குழந்தைப் பருவத்தில் தட்டம்மை பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பின்வரும் காலங்களில் சில வகைத் தோல் வியாதிகள், சிலவகைப் புற்றுக் கட்டிகள், முதுமை காரணமாக ஏற்படும் எலும்பு மற்றும் மூட்டுத் தேய்மானப் பிரச்சினைகள், அந்நோயால் தாக்கப்படாதவர்களைக் காட்டிலும் குறைவாக ஏற்படுகின்றன என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
பொதுவாக, இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைவால் 45 சதவீத குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் அது 32 சதவீதமாக ஆக உள்ளது. ஊட்டச் சத்துக் குறைவைப் போக்கி நோய் எதிர்ப்புத் திறனைப் பெருக்க மத்திய மாநில அரசுகள் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளன? ' ஊட்டச் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பு ஊசிகளைக் கொடுத்த பிறகு எதிர்பார்த்த நோய் எதிர்ப்புத் திறன் கிடைக்கவில்லை' என்பதை மருத்துவர் சந்திரா பதிவு செய்துள்ளார். (R.K.Chandra, “Nutritional Deficiency and susceptibility to Infection”, Bulletin of WHO). வைட்டமின் ஏ சத்துக் குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டாலும் அந்நோயால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். அதை சரி செய்ய இரண்டு நாட்களுக்கு 2 லட்சம் ஐ.யு என்ற அளவில் வைட்டமின் ஏ கொடுக்கப்பட்டால் இறப்பு விகிதம் வெகுவாகக் குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1986-1994 வரை ஒன்பது மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட தட்டம்மை தடுப்பு ஊசியால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், '115 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்' என்றும் அவர்களில், '79 பேர் மரணமடைந்தனர்' என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் திரும்பும் 1980!
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, 'இந்தத் தடுப்பூசியை மக்கள் அவசியம் போட்டுதான் ஆகவேண்டும் என்று நாங்கள் வற்புறுத்த மாட்டோம்; போட்டாலும் போடலாம்; போடாமலும் இருக்கலாம்” என்று அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கூட, காயத்ரி ஆனந்த் என்ற சமூக ஆர்வலர், ' எம்.எம்.ஆர் தடுப்பு ஊசி உபயோகப்படுத்தப்பட்டு வரும் போது, புதிய எம்.ஆர் தடுப்பு ஊசியைக் கொண்டு வருவதை 90 சதவீத மக்கள் எதிர்க்கின்றனர்' எனத் தெரிவித்திருக்கிறார். இந்திய ஆய்வுகள், ' இந்தத் தடுப்பு ஊசி ஒரு வயதுக்கு மேலே உள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும்போதுதான், நோய்த் தடுப்புப் புரதம் அவர்களுக்குள் அதிகம் உண்டாவதை உறுதிப்படுத்திய நிலையிலும்கூட ஒன்பதாவது மாதத்திலேயே இதைக் கொடுக்க வேண்டும்' என்று அரசின் திட்டம் இருக்கிறது. ஆனால், பல நாடுகளில் இது ஒன்று அல்லது அதற்கு மேலான வயதில்தான் கொடுக்கப்படுகிறது. 1980-ம் ஆண்டில் ரோட்டரி சங்கம் மூலம் தட்டம்மை தடுப்பூசி அனுமதியில்லாமல் தமிழகத்திற்குள் நுழைந்தது. 1990-ம் ஆண்டில்தான் தட்டம்மை தடுப்பூசியை திட்டத்தில் சேர்த்துக் கொண்டது மத்திய அரசு. அதேபோன்ற சூழல் தற்போதும் ஏற்பட்டுள்ளதாகவே அஞ்சுகிறோம்.
குறிவைக்கப்பட்ட கறுப்பின குழந்தைகள்!
1989-91 ஆண்டு காலகட்டத்தில், கெய்சர் பெர்மணன்டே(Kaiser Permanente) நிறுவனமும் அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மையம் (CDC) இணைந்து கூடுதல் வீரியம் கொண்ட Edmonston Zagreb வைரஸின் அடிப்படையிலான தடுப்பு ஊசியை உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள 1,500 குழந்தைகளுக்குப் போட்டனர். 'இந்தத் தடுப்பு மருந்து வீரியம் கூடியது' என்பதை இந்த நிறுவனங்கள் குழந்தைகளின் பெற்றோர்களிடம் மறைத்தது மட்டுமல்லாமல், 'இந்த மருந்து அரசின் உரிமம் பெறாதது' என்பதையும் மறைத்து விட்டார்கள். இந்தக் குழந்தைகள் பெரும்பாலானோர் கருப்பின–லத்தீன் இன ஏழைக் குழந்தைகள். இந்தப் பரிசோதனையில் 35 குழந்தைகள் இறந்து விட்டனர். இதனை லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ் பத்திரிகை வெளிக்கொண்டு வந்தது. சி.டி.சியும் இதை ஒத்துக் கொண்டது. 1989-ம் ஆண்டில் இந்தத் தடுப்பு ஊசியைப் பரிசோதனை செய்வதற்கான அனுமதியை உலக சுகாதார நிறுவனம் வழங்கியது. ஆனால், இந்தப் பரிசோதனைகள் 1985-ம் ஆண்டிலிருந்தே டோகோ, ஐவரி கோஸ்ட், ஜேய்ரெ, பெரு, மெக்சிகோ, தாய்லாந்து, நியூ கினி, பிலிப்பைன்ஸ், ஹைத்தி, கினி பாசு, கேம்பியா மற்றும் செனெகல் ஆகிய நாடுகளில் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டன. இந்தப் பரிசோதனைகளில் நடுத்தரம் மற்றும் கூடுதல் வீரியம் மிக்க வகையில் அமைந்த தடுப்பு ஊசி பயன்படுத்தப்பட்டது. கினிபாசு மற்றும் கேம்பியாவில் இந்த வகை தடுப்பு ஊசிகளைப் போட்டுக் கொண்ட குழந்தைகள் குறைந்த வகை வீரியம் கொண்ட ஈ.இசட் வகை தடுப்பு ஊசியைப் போட்டுக்கொண்ட குழந்தைகளைவிட அதிகம் இறந்து போயினர்.
லாஸ் ஏஞ்செல்ஸ் ரகசியம்!
மக்களிடமே விட்டுவிடுங்கள்!
" தட்டம்மை நோயைத் தடுப்பதில் வைட்டமின் ஏ–விற்குப் பெரும்பங்கு உள்ளது என்பதை இன்று அறிவியல் உலகம் அனைத்தும் ஆய்வுகள் மூலம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஜனநாயக ரீதியாக விவாதங்கள் ஏதும் இன்றி மேலிருந்து கீழாகத் திணிக்கப்படும் தடுப்பு ஊசிக் கிருமிகள் உள்ளூர்க் கிருமிகளைக் காலி செய்து வேற்று நாடுகளின் பிடியில் இருக்கும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கிருமிகளை (Designer Virus) நம்முள் புகுத்தும். பின்னர் அவர்கள் துணையின்றி நம்மால் அதனைக் கட்டுப்படுத்த இயலாமல் போகும் நிலைமை உருவாகும். இதில் உள்ள உண்மையினை 2003-ம் ஆண்டில் ஆல்ஃபிரட் கிராஸ்பி எழுதிய எகாலஜிக்கல் இம்பீரியலிசம் (Ecological Imperialism) புத்தகத்தில் பதிவு செய்துள்ளதை சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது. ஐரோப்பியக் கண்டத்திலிருந்து கிளம்பிய கொலம்பஸ் குழுவினர் 1492-ம் ஆண்டில் அமெரிக்கக் கண்டத்தைக் கண்டெடுத்த பின்னர், அவரது சந்ததியர்களால் உலகெங்கும் சிஃபிலிஸ், மீசில்ஸ், டைஃபஸ், பெரியம்மை போன்ற நோய்கள் பரப்பப்பட்டன. இதனால், பல்வேறு பூர்வகுடி இன மக்கள் பூண்டோடு அழிந்து போயினர் என்பதை ஆல்ஃபிரட் கிராஸ்பி விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்.
புதியவகைக் கிருமிகளை (exotic) கட்டுப்படுத்தும் அறிவியல் தொழில்நுட்பம் மேலை நாடுகளில் இருப்பதால் பாதிப்பையும் ஏற்படுத்தி, சிகிச்சைக்கான தீர்வையும் முன்வைத்து அவர்களுக்கு சாதகமாக கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய வாய்ப்பு இல்லை என்று எவராலும் அறுதியிட்டுக் கூற முடியுமா? தமிழகத்திலும் இந்தியாவிலும் ஏற்கனவே எம்.எம்.ஆர் தடுப்பு ஊசி பயன்பாட்டில் இருக்கும்போது, இந்தப் புது எம்.ஆர் தடுப்பு ஊசியினை அறிமுகப்படுத்துவதற்கான தேவை என்ன? அதுவும் ஒரே மாதத்திற்குள் ஒன்பது மாதக் குழந்தை முதல் 15 வயது சிறுவர்-சிறுமியர்களுக்கு எந்த அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் தடுப்பூசி போடுகிறார்கள்? இதன் சாதக, பாதகங்களை ஒளிவுமறைவின்றி மக்களிடம் தெரியப்படுத்தி, சட்டரீதியாக எவரையும் வற்புறுத்தாமல் தடுப்பு ஊசியைப் போட்டுக்கொள்வதா வேண்டாமா என்பதை முடிவெடுக்கும் உரிமையை மக்களிடமே விட்டுவிட வேண்டும். அதுதான் மக்கள் நலனை விரும்பும் அரசு செய்ய வேண்டிய முக்கிய பணியாக இருக்க முடியும்" எனக் கவலையோடு பேசி முடித்தார்
http://www.vikatan.com/news/india/80026-all-you-need-to-know-about-mr-vaccine.art