/indian-express-tamil/media/media_files/2026/04/26/us-3-19-2026-04-26-08-44-52.jpg)
வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் வருடாந்திர இரவு விருந்து நிகழ்ச்சியில், திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் பிற முக்கிய தலைவர்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உடனடி காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
25 4 2026
சுமார் 2,600 விருந்தினர்கள் கலந்துகொண்ட அந்த விருந்தின்போது ஹோட்டல் வளாகத்தில் கேட்ட பலத்த சத்தத்தைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் படையினர் உடனடியாக குவிக்கப்பட்டனர். அந்த சத்தம் துப்பாக்கிச் சூடாக இருக்கலாம் என்று கருதப்பட்டதால் அங்கிருந்த மக்கள் பீதியடைந்தனர். மக்கள் மேஜைகளுக்கு அடியில் பதுங்கிப் பாதுகாப்பு தேடிக் கொண்டதாகவும், பின்னர் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் சாட்சிகள் தெரிவித்தனர். 2015-ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிபர் டிரம்ப் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்தச் சம்பவம் குறித்து ட்ரூத் சோஷியல்தளத்தில் பதிவிட்ட டிரம்ப், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பிடிபட்டதாகவும், தானும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் வெள்ளை மாளிகையில் இருந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தச் சம்பவம் ஒரு தனிநபர் நடத்திய வெறிச்செயல் (lone wolf whack job) என்று குறிப்பிட்டார். தாக்குதல் நடத்தியவர் பல ஆயுதங்களுடன் பாதுகாப்புச் சோதனைச் சாவடிக்குள் நுழைய முயன்றதாகவும், பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கையால் அவர் பிடிபட்டதாகவும் டிரம்ப் விவரித்தார்.
இந்தத் தாக்குதலில் ரகசிய சேவை அதிகாரி ஒருவர் மிக நெருக்கமான தொலைவில் இருந்து சுடப்பட்டார். இருப்பினும், அவர் அணிந்திருந்த குண்டு துளைக்காத கவச உடையால் உயிர் தப்பினார். அந்த அதிகாரியுடன் தான் பேசியதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் டிரம்ப் கூறினார். இந்தச் சம்பவத்தை எப்.பி.ஐ உறுதி செய்துள்ளதுடன், சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/04/26/trump-2026-04-26-08-57-22.jpg)
நிகழ்ச்சி மேடையிலிருந்து சுமார் 40 அடி தொலைவில் இருந்த பிபிசி செய்தியாளர், தானியங்கி துப்பாக்கியிலிருந்து வரும் ஒருவித முழக்கச் சத்தம் கேட்டதாகத் தெரிவித்தார். அந்தச் சமயத்தில் மேடையில் இருந்த ராபர்ட் எஃப். கென்னடி உள்ளிட்ட தலைவர்கள் உடனடியாகப் பக்கத்து அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜனநாயகக் கட்சியின் செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர், குடியரசுக் கட்சியின் செனட்டர் ரேண்ட் பால் மற்றும் பிரதிநிதி நான்சி மேஸ் ஆகியோர் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று பிரார்த்திப்பதாகக் கூறினர்.
செய்தியாளர் சந்திப்பின்போது டிரம்ப், தனது முந்தைய பட்சலர் மற்றும் பாம் பீச் ஆகிய இடங்களில் நடந்த கொலை முயற்சி சம்பவங்களை நினைவுகூர்ந்தார். இந்தச் சம்பவம் மெலனியா டிரம்ப்பிற்கு ஒரு அதிர்ச்சிகரமான அனுபவமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஒத்திவைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி மீண்டும் ஒரு தேதியில் நடைபெறும் என்றார். அப்போது தான் மிகவும் கடுமையாகப் பேசாமல், கண்ணியமான உரையை நிகழ்த்தப் போவதாகவும் டிரம்ப் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். வெளிப்படைத்தன்மையைக் கருத்தில் கொண்டு, பிடிபட்ட நபர் மற்றும் பாதுகாப்பு கேமரா காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதாகத் தெரிவித்த டிரம்ப், சமூகத்தைச் சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியளித்தார்.
source https://tamil.indianexpress.com/india/us-president-donald-trump-evacuated-from-white-house-correspondents-dinner-following-shooting-incident-11766734





