This News fact Checked by ‘Aaj Tak’…
உத்தரப்பிரதேசத்தில் பேரணியின் போது அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மீது காலணிகள் வீசப்பட்டதாக பரவும் செய்தி போலியானது என்று தெரிய வந்துள்ளது.
மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஏற்கெனவே 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், மீதமுள்ள 4 கட்ட வாக்குப்பதிவுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். ரோடு ஷோ, பொதுக்கூட்டங்கள் என மக்களின் வாக்குகளைப் பெற தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு இடங்களில் பொதுமக்களும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே உத்தரப் பிரதேசத்தில் பரப்புரை பேரணியின் போது அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மீது செருப்பு மற்றும் ஷூக்கள் வீசப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
X தளத்தில் இந்த வீடியோவை பதிவிட்ட ‘Sandeep Arya’ என்ற பயனர், செருப்புகள் மற்றும் காலணிகளுடன் அகிலேஷ் யாதவை மக்கள் வரவேற்பதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் ‘லைவ் ஃப்ரம் கன்னூஜ்’ என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ ஃபேஸ்புக்கிலும் அதிகம் பகிரப்பட்டது.
உண்மை சரிபார்ப்பு
அகிலேஷ் யாதவ் மீது காலணிகள் வீசப்பட்டது உண்மைதானா என்பதை ஆஜ் தக் ஆய்ந்தது. அந்த ஆய்வின் முடிவில் அகிலேஷ் யாதவ் மீது வீசப்பட்டது பூக்களும், மாலைகளும் தானே தவிர காலணிகள் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.
வைரலான வீடியோ குறித்து தேடுகையில், அகிலேஷ் யாதவ் மீது காலணிகள் வீசப்பட்டதாக எந்த செய்திகளும் கிடைக்கவில்லை. வீடியோவில் ‘VIKASHYADAVAURAIYARALE’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், அந்த கணக்கை தேடிய போது, அதில் இந்த வீடியோ மே 5-ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வீடியோவை ஸ்லோ மோஷனில் ஓட்டிப் பார்த்த போது, அகிலேஷ் யாதவ் மீது மக்கள் பூக்கள் மற்றும் மலர் மாலைகளை வீசுவது மட்டுமே பதிவாகியிருந்தது. செருப்பு வீசப்படுவது போன்ற காட்சி வீடியோ முழுவதும் எந்த இடத்திலும் பதிவாகவில்லை.
மேலும், ‘லைவ் ஃப்ரம் கன்னூஜ்’ என்று வீடியோவில் இடம்பெற்றிருந்தது குறித்து தேடிய போது, உத்தரப்பிரதேசத்தின் கன்னூஜ் நகரில் அகிலேஷ் யாதவ் நடத்திய ரோட் ஷோ குறித்த செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது. ‘டைனிக் பாஸ்கர்’ என்ற நாளிதழின்படி, கடந்த ஏப்ரல் 27-ம் தேதி கன்னூஜ் நகரில் அகிலேஷ் யாதவ் ரோட்ஷோ நடத்தியுள்ளார்.
இந்த ரோட்ஷோ குறித்து சமாஜ்வாடி கட்சியின் யூடியூப் சேனலில், ஏப்ரல் 27, 2024 தேதியிட்ட வீடியோவும் கிடைத்தது. வைரலாக்கப்பட்ட வீடியோவில் அகிலேஷ் யாதவ் உடன் இருந்த பெண், இந்த வீடியோவில் அதே உடையில் இருந்ததைக் காணமுடிந்தது. அவர் எம்.எல்.ஏ. ரேகா வர்மா என்பது அடையாளம் காணப்பட்டது.
இதனை அடுத்து, வைரலான வீடியோ குறித்து எம்.எல்.ஏ. ரேகா வர்மாவிடம் கேட்கையில், இந்த வீடியோ கடந்த ஏப்ரல் 27-ம் தேதி ரசூலாபாத் நகரில் நடைபெற்ற ரோட்ஷோ என்று தெரிவித்தார்.
இதன்மூலம், அகிலேஷ் யாதவ் மீது காலணிகள் வீசப்படவில்லை என்பது உறுதியாகிறது.
source https://news7tamil.live/shoes-thrown-at-akhilesh-yadav-during-rally-what-is-the-truth.html