பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது என்று சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன் தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கியது. தற்போது வரை இரண்டு கட்டங்கள் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சிதம்பரம் தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரியலூரில் உள்ள கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்னணு வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிடுவதற்காக சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்றார்.
இதனைத் தொடர்ந்து அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“தொடக்கத்தில் இருந்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை ஒரு சார்பாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பாஜகவுக்கு சாதகமான அணுகுமுறையாக இருக்கிறது.
தேர்தல் பரப்புரை விவகாரங்களில் யார் மீது குற்றம் சுமத்தப்படுகிறதோ அவருக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும். அப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்க கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டிய தேர்தல் ஆணையம், அதற்கு மாறாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவுக்கு அனுப்பியது ஏன்? என்று விளங்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது.
இவ்வாறு சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன் தெரிவித்தார்.
source https://news7tamil.live/prime-minister-modi-is-talking-about-the-fear-that-the-congress-and-india-alliance-will-win-thirumavalavan-interview.html