சனி, 10 ஆகஸ்ட், 2024

சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகள் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

 

சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது  அவசியம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது, இதே குற்றச்சாட்டுக்காக மாநிலம் முழுவதும் 16 வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து சவுக்கு சங்கரை சென்னை கமிஷனர் உத்தரவின்பேரில் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த உத்தரவை எதிர்த்து சவுக்கு சங்கின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணை நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.  அப்போது நீதிபதிகள், “சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம். அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்போருக்கு எதிராக உரிய சட்டங்களின் கீழ் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஊடகங்கள் வருகைக்குப் பின் அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளது ஆரோக்கியமானது.

மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளன. அரசு அதனை முடக்க கூடாது. 78 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர்.

மேலும், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவில் உள்நோக்கம் இருப்பதாக கூறி, அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


source https://news7tamil.live/suppress-the-voice-of-the-people-again-as-we-celebrate-the-77th-independence-day-madras-high-court-question.html

Related Posts: