சுற்றறிக்கை: 56/2025
தேதி: 15.09.2025
இறைவனின் திருப்பெயரால்...
வக்ஃப் சொத்தில் வரம்பு மீறும் ஒன்றிய அரசு,
வருடிக் கொடுக்கும் நீதிமன்றம்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வக்ஃப் சட்டம் முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கிறது என்று நாடெங்கிலும் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளும், தலைவர்களும் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் விசாரணையும் நடைபெற்று வந்தது.
ஒட்டு மொத்த முஸ்லிம்களின் விருப்பமும் வழக்கு தொடுத்தவர்களின் நோக்கமும் ஒன்றே ஒன்று தான். முஸ்லிம்களின் வக்ஃப் சொத்தை சூறையாடும் நோக்கத்தில் கொண்டு வந்த புதிய வக்ஃப் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்பது தான்.
விசாரணையின் துவக்கத்தில் உச்சநீதிமன்றம் எழுப்பிய பல கிடுக்குப்பிடி கேள்விகளும் அத்தகைய நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்தது.
வக்ஃப் வாரியத்தில் ஏன் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள்? இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை வாரியங்களில் உறுப்பினர்களாக அனுமதிப்பீர்களா? என்றெல்லாம் உச்சநீதிமன்றம் கேள்விகளை எழுப்பி நம்பிக்கையூட்டியது.
வக்ப் பை யூசர் (Waqf by user) என்ற சட்டத்திருத்தத்தை விமர்சிக்கும் வகையில் 13 முதல் 15-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவைகளுக்கு இப்போது ஆவணங்களைத் தருவது சாத்தியமில்லாதது என்று கூறி புதிய சட்டத்தின் ஓட்டைகளை அம்பலப்படுத்தியது.
இதன் அடிப்படையில் முஸ்லிம்களின் மத சுதந்திரத்தையும் தங்கள் சொத்தை தாங்களே நிர்வகிக்கும் உரிமையையும் ஒருசேர பறிக்கும் இந்த வக்ஃப் கொள்ளைச் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்து விடும் என்று முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அதில் மண்ணை அள்ளிப் போடும் வகையில் தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளிவந்துள்ளன.
உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வில் வக்ஃப் சட்டம் தொடர்பான விசாரணை இன்று (15.09.25) வந்தது. அதில் வக்ஃப் சட்டத்தை முழுவதுமாக தடை செய்ய முகாந்திரம் இல்லை என்று கூறி சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வக்ஃப் சட்டத்தில் உள்ள ஒரு சில விஷயங்களுக்கு மட்டுமே இடைக்கால தடை விதித்துள்ளது. இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம் 5 ஆண்டுகளுக்கு பிறகே வக்ஃப் செய்ய முடியும் என்ற திருத்தம் மற்றும் வக்ஃப் சொத்தில் அரசு உரிமை கோரினால் அதில் கலெக்டருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கும் புதிய திருத்தம் ஆகியவற்றை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இது கூட இடைக்கால நிறுத்திவைப்புதான்.
மேலும் மாநிலத்தின் வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களின் பங்களிப்பு 3 ஐ தாண்டக்கூடாது என்று கருத்துக்கூறி முஸ்லிம்களின் வக்ஃப் சொத்தில் முஸ்லிம் அல்லாதவர்களின் பங்களிப்பை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
மாநில வக்ஃப் வாரியத்தில் சி.இ.ஓ வாக ஒரு முஸ்லிம் அல்லாதவர் நியமிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் குறித்து எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
நீதிமன்றத்தின் இக்கருத்துகள் மத்திய அரசை வருடிக் கொடுப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது.
விசாரணையின் முந்தைய அமர்வுகளில் இந்து அறக்கட்டளையிலும் திருப்பதி தேவஸ்தானம் போர்டிலும் இஸ்லாமியர்களை உறுப்பினர்களாக அங்கீகரிப்பீர்களா ? என்று உச்சநீதிமன்றம் தானே எழுப்பிய கேள்விக்கு முரணாக இப்போது கருத்து தெரிவித்திருப்பது வியப்பைத் தருகிறது.
இதை எப்படி புரிந்து கொள்வது என்பதை உச்சநீதிமன்றம் தான் விளக்க வேண்டும்.
முஸ்லிம் அல்லாதவர்கள் தானம் செய்ய தடை என்ற புதிய சட்டத்தை உச்சநீதி மன்றம் மவ்னமாக கடந்து செல்கிறது.
இடைக்காலமாக நிறுத்தி வைத்துள்ள திருத்தங்களை தவிர ஏனைய சட்டப்பிரிவுகளிலேயே வக்பை நாசமாக்கும் பல பாதகமான அம்சங்கள் உள்ளன. அவற்றுக்கு உரிய தீர்வை நீதிமன்றம் ஏற்படுத்திதரவில்லை.
வக்ஃப் பை யூசர் (Waqf by user) செல்லாது என்று சொல்லும் புதிய சட்டம் ஏற்றுக் கொள்ளப்படுமேயானால் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளையே மீண்டும் நினைவூட்டுகிறோம்.
ஆவணங்கள் தர சாத்தியமில்லாத காலத்தில் வாய்மொழியாக வக்ஃப் செய்யப்பட்ட சொத்துக்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய பாதுகாப்பு என்ன?
வக்ஃப் செய்வதற்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றி இருக்க வேண்டும் என்ற புதிய சட்டவிதியை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம் ஒருவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் நபர்தானா? என்பதற்கான விதிகளையும் வழிகாட்டல்களையும் மாநில அரசுகள் வகுக்கும் வரை இவ்விதி நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
ஒருவர் தனது மதத்தை சொல்வதன் மூலம் அவர் முஸ்லிமா? இல்லையா? என்பது தெரிந்து விடும். அதை தவிர இஸ்லாத்தை பின்பற்றும் நபர் என்பதற்கான விதிகளை மாநில அரசுகள் எப்படி வகுக்க முடியும்?
அப்படி வகுக்கும் என்றால் இது முஸ்லிமுக்கு மட்டுமா ? பிற மதங்களை சார்ந்தவர்களுக்கும் அப்படியான விதிகள் வகுக்கப்பட உள்ளதா என பல குளறுபடிகளை கொண்ட கருத்தாகவே இது உள்ளது.
பல்வேறு விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தனது சாட்டையை சுழற்றியது போல வக்ஃப் சட்டத்தில் செய்யவில்லை.
வக்ஃப் விவகாரத்தில் மத்திய அரசின் சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு உச்சநீதிமன்றம் வருடிக் கொடுக்கும் நிலை தான் உள்ளது.
வக்ஃப் சொத்தை சூறையாடும் மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்றால் மக்களின் எழுச்சி மிக்க ஜனநாயக போராட்டங்கள் தான் தீர்வாக அமையும்.
இப்படிக்கு,
அ.முஜீபுர் ரஹ்மான்,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.





