ஞாயிறு, 26 ஜூலை, 2026

எங்கள் போராட்டம் தொடரும்: பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்;

 எங்கள் போராட்டம் தொடரும்: பிரதமர்  மன்னிப்பு கேட்க வேண்டும்;


நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு முழுவதும் வெடித்த தீவிரப் போராட்டங்களை அடுத்து, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, நாட்டின் கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் இந்த போராட்டத்தைப் பாராட்டியதோடு, இது மாணவர் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் குறிப்பிட்டார். நாட்டின் கல்வி முறைத் தாக்கப்பட்டும், தனியார்மயமாக்கப்பட்டும் வந்த நிலையில், அதற்கு எதிரான எதிர்வினையாகவே இந்தப் போராட்டம் அமைந்தது என்றும் அவர் தெரிவித்தார். தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டியிருந்தது; அவர் விலகியது நல்லது. ஆனால், இப்போது கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டுவர அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.


மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பைக் கடுமையாகச் சாடிய அவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்தியாவின் கல்வி அமைப்பைக் கைப்பற்றியுள்ளது. மோடி மீது தவறு இருக்கிறது என்றால், ஆர்.எஸ்.எஸ் மீதும் சம அளவு தவறு இருக்கிறது. அது நமது கல்வி முறைக்கு ஒரு கரையான் போலச் செயல்பட்டுள்ளது. நமது அறிவுத்துறை தாக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.


மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பிரதமர் மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி மேலும் வலியுறுத்தினார். எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்; உங்க அனைவரையும் குறித்து நாங்க பெருமைப்படுகிறோம். இந்த அரசை அகற்றுவதற்கான நேரம்வந்துவிட்டது. பயப்படாதீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குப் பேட்டியளித்த மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கெளரவ் கோகோய், நாங்கள் மாணவர்களுடன் இணைந்து நிற்கிறோம். திங்கள்கிழமை நடைபெற்ற காவல்துறை வன்முறைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் வெவ்வேறு குரல்களில் பேசி வருகின்றனர் எனக் கூறினார். நீட் வினாத்தாள் கசிவு வழக்குகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ.10 கோடி அபராதம் மற்றும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த மறுநாளே பிரதானின் ராஜினாமா வந்துள்ளது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில், திறமையற்ற, அலட்சியமான மற்றும் அகந்தை கொண்ட அமைச்சர் பிரதான் இறுதியாக ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளார். ஆனால் இது முடிவு அல்ல; மாணவர்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும். பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தி அக்கிரமம் செய்தவர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட உத்திகள் வகுக்கப்படும் என காங்கிரஸ் எம்.பி-க்கள் தெரிவித்தனர்.

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வத்ரா கேரளாவின் கல்பெட்டாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களின் விருப்பத்திற்கு ஒரு ஜனநாயகமற்ற அரசு பணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் இளைஞர்கள் தங்களின் உரிமைகளை மீட்டெடுக்கத் தொடங்கி விட்டனர் என்றார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், மாணவர்களின் குரல் இறுதியாக அகந்தை கொண்ட அதிகாரத்தின் வாசலை அடைந்துள்ளது. இது கோடிக்கணக்கான இளைஞர்களின் வெற்றி. இப்போது பிரதமர் மோடி தனது பிடிவாதத்தை விட்டுவிட்டு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி கட்சித் தலைவர்): எந்த ஒரு வினாத்தாளும் கசியக்கூடாது என்பதே இந்த இயக்கத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். உலகின் மிகப்பெரிய கட்சி என்று உரிமை கோரும் பிஜேபியை இளைஞர்கள் பணிய வைத்துள்ளனர் என்றார்.

சாகரிகா கோஷ் (திரிணமூல் காங்கிரஸ் எம்.பி): சுய குரலை மட்டுமே கேட்க விரும்பும் நரேந்திர மோடியை, மக்களின் குரலைக் கேட்க இந்தியாவின் இளைஞர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

அரவிந்த் கெஜரிவால் (ஆம் ஆத்மி கட்சி): இது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இளைஞர்களின் முயற்சியால் அரசின் அகந்தை உடைந்துள்ளது என வாழ்த்தினார்.

சரத் பவார் (என்சிபி தலைவர்): டெல்லி ஜந்தர் மந்தரில் 28 நாட்களாகத் தொடர் போராட்டம் நடத்திய மாணவர்களின் மனஉறுதிக்கு கிடைத்த வெற்றி இது. இளைஞர் சக்தியின் ஒற்றுமைக்கு இது சிறந்த உதாரணம் எனக் கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/our-fight-will-go-on-pm-modi-must-apologise-says-rahul-gandhi-12197536