செவ்வாய், 27 ஜூன், 2023

கடந்த 10 ஆண்டுகளில் 70,000 இந்தியர்கள் தங்கள் பாஸ்போர்ட் ஒப்படைப்பு : காரணம் என்ன?

 27 6 23

Possport
இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955ன் கீழ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இரட்டைக் குடியுரிமை பெற அனுமதிக்கப்படுவதில்லை

இந்தியாவில் கடந்த 2011 முதல் 2022-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட 11 ஆண்டுகளில் சுமார் 70,000 பேர் தங்கள் பாஸ்போர்ட்களை பாஸ்போர்ட் அலுவலகங்களில் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இந்தியாவில் உள்ள முக்கிய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா கோவா, பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் சண்டிகர் ஆகிய எட்டு மாநிலங்களில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட 11 ஆண்டுகளில்  சுமார் 70,000 பேர் நாடு முழுவதும் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகங்களில் (ஆர்.பி.ஓ.க்கள்)தங்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துள்ளனர். இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள தங்களது ஆவணத்துடன் ஒப்படைத்துள்ளனர்.

இந்த 11 ஆண்டு காலக்கட்டத்தில் ஒப்படைக்கப்பட்ட 69,303 பாஸ்போர்ட்களில் 40.45 சதவீதம் கோவாவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் பதிவு செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் (எம்இஏ) இந்த தகவல்களை அளித்துள்ளது.

அதன்படி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பல்வேறு பாஸ்போர்ட் அலுவலகங்களில் 69,303 பாஸ்போர்ட்டுகள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் அனைவரும் இந்திய குடியுரிமையை கைவிட்டதன் ஒரு பகுதிதான் என்றும் கூறியுள்ளது. கடந்த மார்ச் 24 ஆம் தேதி அமைச்சர் வி.முரளீதரன் பாராளுமன்றத்தில் பகிர்ந்து கொண்ட தகவல்களின்படி, 2011 மற்றும் அக்டோபர் 31 க்கு இடையில், 16.21 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.

அதே சமயம் ஆர்.டி.ஐ (RTI) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தகவல்கள் இந்திய பாஸ்போர்ட் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்ட பாஸ்போர்ட்கள் குறித்த விபரங்கள் மட்டும் தான். வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களில் ஒப்படைக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து மக்கள் வெளியேறுவது பற்றிய தகவலை வழங்கும் ஆர்டிஐ-க்கு, இரண்டாவது மேல்முறையீட்டில் மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தகவல்கள் வழங்கப்பட்டது.

அதன்படி இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955ன் கீழ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இரட்டைக் குடியுரிமை பெற அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு நபர் எப்போதாவது இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்கும்போது, வேறு நாட்டின் பாஸ்போர்ட்டைப் பெற்றிருந்தால், அவர்கள் உடனடியாக இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். அந்த வகையில் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ள 69,303 பாஸ்போர்ட்களில், கோவாவில் அதிகபட்சமாக – 28,031,(40.45 சதவீதம்) பஞ்சாப் (சண்டிகர் யூனியன் பிரதேசம் உட்பட) 9,557 பாஸ்போர்ட்கள் (13.79 சதவீதம்) ஒப்படைக்கப்பட்டுள்ளது

2011 மற்றும் 2022 க்கு இடையில் அகமதாபாத் மற்றும் சூரத்தில் உள்ள பாஸ்போட் அலுவலகங்களில் 8,918 பாஸ்போர்ட்டுகள் (12.87 சதவீதம்) மகாராஷ்டிராவில் 6,545 பாஸ்போர்ட்டுகள் (9.44 சதவீதம்) நாக்பூர், புனே மற்றும் மும்பை/தானே ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல் தென் மாநிலங்களான கேரளா 3,650 பாஸ்போட்டிகள் (5.27 சதவீதம்) மற்றும் தமிழ்நாடு 2,946 பாஸ்போர்ட்கள் (4.25 சதவீதம்) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

லோக்சபாவில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, 2011 முதல் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 11,422 இந்தியர்கள் இந்தியக் குடியுரிமையைத் துறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது மறுபுறம், இந்தியா முழுவதும் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 482 இந்திய பாஸ்போர்ட்டுகளை ஒப்படைத்துள்ளனர். இந்தியாவில் பாஸ்போர்ட் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்ட பாஸ்போர்ட்களின் எண்ணிக்கை ஆண்டு வாரியான பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 2011-ம் ஆண்டு 239 பாஸ்போர்ட்டுகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டன, ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் 2012-ம் ஆண்டு 11,492 மற்றும் 2013-ம் ஆண்டு 23,511 பாஸ்போர்ட்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளைத் தவிர, அதிக எண்ணிக்கையிலான பாஸ்போர்ட்கள் ஒப்படைத்த மாநிலங்களின் பட்டியலில் கோவா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2014 ஆம் ஆண்டில், கோவாவின் ஒப்படைக்கப்பட்ட பாஸ்போர்ட்டுகள் நாடு முழுவதும் ஒப்படைக்கப்பட்ட மொத்த பாஸ்போர்ட்களின் எண்ணிக்கையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை.

1961 க்கு முன் கோவாவில் பிறந்தவர்களுக்கு போர்ச்சுகலில் இருந்து கோவா விடுவிக்கப்பட்டதைக் குறிக்கும் ஆண்டு மற்றும் அவர்களின் இரண்டு தலைமுறையினர் போர்த்துகீசிய குடிமக்களாக பதிவு செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. அதன்படி ஒரு போர்த்துகீசிய பாஸ்போர்ட் வைத்திருப்பவருக்கு யூகே (UK)  மற்றும் இயூ (EU) உட்பட பல நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குகிறது. மேலும் போர்ச்சுகல் 1986 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.


source https://tamil.indianexpress.com/india/tamil-nearly-70000-indians-surrendered-their-passports-in-a-decade-40-percent-of-them-in-goa-707363/