திங்கள், 22 ஏப்ரல், 2024

இந்தியா கூட்டணியின் சக்தியை உங்களால் உடைக்க முடியாது” – ராஞ்சியில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

 

“மோடியோ..வேறு யாரோ.. இந்தமுறை இந்தியா கூட்டணியின் சக்தியை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது” என ராஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட்டில் மாநிலத்தை ஆளும்  ‘ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா’ கட்சி சார்பில் அம்மாநில தலைநகர் ராஞ்சியில் இன்று புரட்சிப் பேரணி’ என்ற பெயரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன்,  தற்போதைய ஜார்கண்ட் முதலமைச்சர் சாம்பாய் சோரன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், பீகார்  மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. தீடீர்  உடல்நலக்குறைவால் அவரால் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார். ஆனால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்தாலும், அவருடைய நினைவாக மேடையில் காலி நாற்காலி ஒன்று போடப்பட்டிருந்தது கவனத்தை ஈர்த்தது. அதே போல, அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள டெல்லி முதமைச்சர் அரவிந்த் கேஜரிவாலுக்காகவும் காலி நாற்காலி போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவியான சுனிதா கேஜ்ரிவால் தெரிவித்ததாவது…

“அரவிந்த் கேஜரிவாலுக்கு அதிகாரத்தின் மீது ஆசையில்லை. தேசத்துக்காக சேவையாற்றுவதே அவருடைய விருப்பம். கெஜ்ரிவால் சாப்பிடும் உணவைக் கூட கேமரா வைத்து கண்காணிக்கின்றனர். அவர் ஒரு சர்க்கரை நோயாளி. கடந்த 12 ஆண்டுகளாக, தினசரி 50 யூனிட் இன்சுலின் எடுத்து வருபவர். இந்த நிலையில், சிறையில் அவருக்கு இன்சுலின் வழங்கப்படவில்லை. இதன்மூலம், டெல்லி முதல்வரை கொல்ல முயற்சி நடக்கிறது” என சுனிதா ஜெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்ததாவது..

“ மக்களவைத் தேர்தலில் 400 இடங்கள் அல்லது 500 இடங்கள் என பாஜக சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் இம்முறை இந்தியா கூட்டணியின் சக்தி மிகவும் உறுதியாகவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, இந்தியா கூட்டணியின்  சக்திக்கு முன் ஒன்றும் செய்ய முடியாது.

அந்த அளவுக்கு கூட்டணி கட்சிகளின் பலம் பெற்றுள்ளது.  அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசின் ஏஜென்சிகளை ஏவிவிட்டு தொடர் கைது நடவடிக்கைகள் மூலம் இந்தியா கூட்டணி கட்சியினரை அச்சுறுத்த பாஜக முயற்சிக்கிறது. அதன் ஒருபகுதியாகவே ஹேம்ந்த் சோரன் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோரை பாஜக சிறை வைத்துள்ளது .  இந்த அச்சுறுத்தல்களுக்கு இந்தியா கூட்டணி ஒருபோதும் அஞ்சாது” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்

source https://news7tamil.live/modi-someone-else-this-time-you-cannot-break-the-power-of-india-alliance-mallikarjuna-karke-speech-in-ranchi.html