செவ்வாய், 23 ஏப்ரல், 2024

தோல்வி பயத்தில் மத உணர்வுகளை தூண்டிவிடுகிறார்” – பிரதமர் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

 

“தோல்வி பயத்தில் மத உணர்வுகளை தூண்டிவிடுகிறார்”  என பிரதமர் மோடியின் பேச்சிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது.  மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில்  நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு  ஏப்ரல் 19ம் தேதி நடந்து முடிந்துள்ளது.  இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

இரண்டாம் கட்டமாக சில மாநிலங்களில் வருகிற ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  அதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.  மத்தியில் ஆளும் பாஜகவின் சார்பில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அதேபோல எதிர்கட்சிகள் சார்பில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.  இதற்கு அரசியல் கட்சிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

சர்ச்சைக்குரிய வகையில் அப்படி என்ன பேசினார் பிரதமர் மோடி?

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்ததாவது.

“ ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,  மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து விடுவார்கள்.  பின்னர் அதனை ஊடுருவல்காரர்களிடம்  கொடுத்து விடுவார்கள் .   அதேபோல காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,  ஒவ்வொருவரின் சொத்துகளும் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.


இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார் தெரியுமா? நமது நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்குத்தான் முதல் உரிமை உள்ளது என்றார்.  அப்படியானால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பீர்கள்?  இதன் பொருள் உங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதுதானே.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்கள் ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? நமது பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கட்சி கணக்கிடும்.  தங்கம் என்பது  ஒரு பெண்ணின் சுயமரியாதை.  ஒரு பெண் அணிந்துள்ள தாலியின் மதிப்பு தங்கத்தின் விலையில் மட்டுமல்ல,  அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பேச்சுக்கு நாடு முழுவதிலும் உள்ள பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டங்கள் எழுப்பி உள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது :

“பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு மிகவும் மோசமானது மற்றும்  வருந்தத்தக்கது. இந்த வெறுப்பு பேச்சினை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தனது தோல்விகளுக்கு எதிரான பொதுமக்களின் கோபத்திற்கு அஞ்சி, மத உணர்வுகளைத் தூண்டிவிடுகிறார். வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்.

பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், தேர்தல் ஆணையம்  நடுநிலை தவறியுள்ளது. பாஜக வின் பிரிவினை செயல்பாடுகள் விவகாரத்தில் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிரதமர் மோடியின் மோசமான தோல்விகளை அம்பலப்படுத்துவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


source https://news7tamil.live/prime-minister-modis-hate-speech-is-unacceptable-chief-minister-m-k-stals-condemnation.html