செவ்வாய், 23 ஏப்ரல், 2024

இந்திய மசாலா பாக்கெட்களுக்கு உலக அளவில் தடை

 

இந்திய நிறுவனங்களின் மசாலா பாக்கெட்களில் ஆபத்தான நச்சுப் பொருள் சேர்க்கப்படுவதாக கூறி,  சர்வதேச அளவில் தடை விதிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  முதல்கட்டமாக ஹாங்காங்,  சிங்கப்பூர் ஆகிய அரசுகள் விற்பனைக்கு தடை விதித்து அதிரடி காட்டியுள்ளன.

மசாலா பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவை சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் ஹாங்காங், சிங்கப்பூர் அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கை, இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்டிஹச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் 4 மசாலா பிராண்ட்களில் எத்திலீன் ஆக்சைடு என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவை எம்டிஹச் Curry Powder,  Mixed Masala Powder,  Sambhar Masala மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் Fish Curry Masala ஆகியவை ஆகும். இவை மனிதர்கள் உணவில் சேர்த்து கொண்டால் நீண்ட கால அடிப்படையில் ஆபத்து ஏற்படும். புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என கூறப்படுகிறது. 

எனவே சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி ஏஜென்சியின் வழிகாட்டுதலின் படி, குரூப் 1 கார்சினோஜென் பட்டியலில் சேர்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். இவற்றுக்கு ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாட்டில் உள்ள உணவுப்பொருள் ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  உடனடியாக கடைகளில் இருந்து மேற்குறிப்பிட்ட மசாலா பாக்கெட்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நச்சுப் பொருள் இருப்பதாக கூறப்படும் மசாலா பாக்கெட்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் திரும்பப் பெற்று கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இந்திய மசாலா பொருட்களுக்கு இத்தகைய சிக்கல் எழுவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு எவரெஸ்ட் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் நிர்வாகம் தடை விதித்தது. இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியதில் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது உணவு அழற்சி ஏற்படுத்தி உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. எனவே இந்தியாவில் தயாரிக்கப்படும் மசாலா பொருட்கள் சரியான முறையில் ஆய்விற்கு உட்படுத்திய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

உணவுப் பொருட்கள் விஷயத்தில் இந்திய அரசு சரியான வழிகாட்டுதல்களை அமல்படுத்தி, அவற்றை அனைத்து நிறுவனங்களும் முறையாக பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

source https://news7tamil.live/global-ban-on-indian-masala-packets-what-is-ethylene-oxide.html#google_vignette