ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

PayPM ஊழலில் 4 லட்சம் கோடி ரூபாய் பொதுப் பணத்தை பாஜக கொள்ளையடித்தது!”

 பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும், தேர்தல் பத்திரம் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்ற நிதியமைச்சர் சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு நபரிடம் நிதி பெற்றால்,  தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்தது. இந்த சட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, தேர்தல் பத்திர திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த சட்டத்தின் மூலம் தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது விருப்பமான கட்சிகளுக்கு ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி வழங்கலாம். தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றால் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க தேவையில்லை.

இந்த திட்டத்தின் கீழ் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெருமளவிலான நிதியை பாஜக பெற்றது. தேர்தல் பத்திர திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “தேர்தல் நிதிப் பத்திரம் என்பது சட்டவிரோதமானது, உடனடியாக இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சியமைத்ததும் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நிறைய ஆலோசனைகள் செய்ய வேண்டியுள்ளது. இதில் முதன்மையாக வெளிப்படைத்தன்மையை தக்கவைத்துக்கொள்ள, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டியுள்ளது. குறிப்பாக கருப்புப் பணம் இதில் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் முற்றிலுமாக நீக்கப்படும்.” எனவும் தெரிவித்துள்ளார்.


இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “PayPM ஊழலில் 4 லட்சம் கோடி ரூபாய் பொதுப் பணத்தை பாஜக கொள்ளையடித்தது நமக்குத் தெரியும். தேர்தல் பத்திரத்தை மீண்டும் கொண்டுவருவதன் மூலம் அவர்கள் தங்கள் கொள்ளையைத் தொடர விரும்புகிறார்கள்.

 

பாஜகவினர் வெற்றி பெற்று தேர்தல் பத்திர திட்டத்தை மீட்டெடுத்தால், இந்த முறை எவ்வளவு கொள்ளையடிப்பார்களோ? இது எங்கள் வாழ்நாளில் மிக முக்கியமான தேர்தல். அதிர்ஷ்டவசமாக, இந்த ஊழல் படையான பாஜக ஆட்சியை விட்டு வெளியேறும் பாதையில் உள்ளது என்பதை தேர்தல் கள நிலவரங்கள் தெளிவுபடுத்துகின்றன” என தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/bjp-looted-4-lakh-crores-of-public-money-in-paypm-scam-nirmala-sitharamans-comments-from-congress.html#google_vignette