சனி, 27 ஏப்ரல், 2024

அமெரிக்காவில் ஃபாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட கோவை மாணவி கைது!

 

அமெரிக்காவில்  படிக்கும் கோயம்புத்தூர் மாணவியான அச்சந்தியா ஃபாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளதால் பல்கலைகழக்த்தில் நுழையவும் தடை விதித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள்  இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் இதுவரை 34,356 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  77,368க்கும் மேற்பட்டோட் காயமடைந்துள்ளனர். இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தியது.

சமீபத்தில் காஸா பகுதியின் 2வது மிகப்பெரிய நகரமான கான் யூனிஸை விட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியதாக தகவல் வெளியானது.  ஆனாலும் போரால் புலம் பெயர்ந்த பாலஸ்தீனர்களின் கடைசி புகலிடமாகத் திகழும் ராஃபாவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாகத்தான் கான் யூனிஸ் நகரிலிருந்து படையினர் வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஃபாலஸ்தீனத்தில் மக்கள் பாதிக்கப்படுவதை உடனே நிறுத்தவும் பாதுகாப்பு மற்றும் மறுகட்டமைப்பு வசதிகளை துரிதப்படுத்தவும் வலியுறுத்தி உலகம் முழுவதும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்  அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக  போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி மாணவி அச்சிந்தியா சிவலிங்கன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவி அச்சிந்தியா சிவலிங்கன் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர் என்பதும் அவரது சொந்த ஊர் கோயம்புத்தூர் என்பதும் பல்கலைக்கழக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் பிரஸ்டன் பல்கலைகழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அச்சந்தியா கோவையில் பிறந்திருந்தாலும் அமெரிக்காவின் கொலம்பஸ் நகரின் ஓகியோவில் வளர்ந்தவர். ஓகியோ பல்கலைகழகத்தில் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற அவர் தற்போது பிரஸ்டன் பல்கலைகழக்த்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பல்கலைகழத்தில் நுழையவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/coimbatore-student-arrested-for-protesting-in-support-of-palestine-in-america.html#google_vignette