வியாழன், 30 மார்ச், 2017

மின் வர்த்தகம்: முதல் முறையாக இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகம்

வரலாற்றில் முதல் முறையாக ஏப்ரல்-பிப்ரவரி காலத்தில் இந்தியாவின் மின் இறக்குமதியை விட மின் ஏற்றுமதி அதிகமாக இருந்ததாக மத்திய மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய மின் ஆணையத்தின் தகவலின் படி, எல்லை தாண்டிய மின்சார வர்த்தகத்தில் முதல் முறையாக இந்தியா இறக்குமதியை விட அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது. 2016-17-ம் ஆண்டு (ஏப்ரல்-பிப்ரவரி) 579.8 கோடி யூனிட் மின்சாரத்தை நேபாளம், வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆதேபோல, பிற நாடுகளிலிருந்து 558.5 கோடி யூனிட் மின்சாரத்தை இறக்குமதி செய்துள்ளது. அதாவது, மின் ஏற்றுமதி மின் இறக்குமதியை விட 21.3 கோடி யூனிட் அதிகம். இந்தியா எல்லை தாண்டிய மின்சார வர்த்தகத்தை 80-களில் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் மின் இறக்குமதிதான் இதுவரை அதிகமாக இருந்துள்ளது. தற்போது ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில் மின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்க இன்னும் சில நாடுகளுடன் இந்தியா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.