சனி, 25 மார்ச், 2017

நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது: மத்திய அரசு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்போதைக்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடுமுழுவதும் மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுவதால் கிராமபுற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவே இதில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜேபி நட்டாவுடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது தமிழகத்திற்கு தற்போதைய சூழலில் நீட் தேர்வில் இருந்து, விலக்கு அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து சட்டத்துறை அமைச்சகத்தின் ஆலோசனையைப் பெற்றுத்தான் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜேபி நட்டா கூறியுள்ளார்.