வெள்ளி, 31 மார்ச், 2017

“தமிழர் பண்பாட்டு திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றது” : பேராசிரியர் க.நெடுஞ்செழியன் March 30, 2017

“தமிழர் பண்பாட்டு திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றது” : பேராசிரியர் க.நெடுஞ்செழியன்


தமிழர் பண்பாட்டு திட்டமிட்டு சிதைக்கப்படுவதாக எழுத்தாளரும், தமிழ் பண்பாட்டு ஆய்வாளருமான பேராசிரியர் க.நெடுஞ்செழியன் குற்றம்சாட்டியுள்ளார்.

கீழடி அகழாய்வு மற்றும் அதன் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நியூஸ்7தமிழுக்கு பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பேட்டியளித்தார். அதன் சாரம் இங்கு வழங்கப்படுகிறது...

“கீழடி அகழ்வாய்வு தமிழினத்தின் தொல்லியல் வரலாற்றை உலகிற்கு புதிய ஒளியோடு வெளிபடுத்தும் ஆய்வாக அமைந்தது. ஈரோடு மாவட்டம் கொடுமணலில் நடந்த அகழ்வாயில் கிடைத்த புதைபொருட்களில் குறிப்பிடத்தக்கது எழுத்துப் பொறிப்புகள் அடங்கிய பானைகள். 

இந்தியா முழுவதும் கிடைத்த எழுத்து பொறிப்பு அடங்கிய பானைகளை விட கொடுமணலில் கிடைத்ததை விட மிகமிக அதிகம். இந்தியாவில் கிடைத்த எழுத்து பொறிப்புள்ள பானைகளில் 99 விழுக்காடு தமிழகத்தில் கிடைத்தது. எழுத்துகளின் வரலாற்றில் கொடுமணல் அகழாய்வு மிகச்சிறந்த இடம் பிடிக்கக் கூடியது.

கொடுமணலில் அகழ்வாய்வு செய்ய வேண்டிய இடத்தில் இதுவரை 5 விழுக்காடு கூட அகழாய்வு நடைபெறவில்லை. கொடுமணல் ஆய்வும் தொடராமல் முடங்கிக் கிடக்கிறது. 

கிராமப்புறத்தை அடிப்படையாக கொண்டது தமிழர்களின் வாழ்வு என்று இவ்வளவு காலமாக சொல்லப்பட்டு வந்தது. அவைகளை தகர்க்கும் வகையில், தமிழர்களின் நகர வாழ்வை வெளிப்படுத்துவதாய் இந்த அகழ்வாய்வுகள் அமைந்தன. ஒவ்வொரு வீட்டிலும் கழிவுநீர் வெளியேறும் வழிகள் உருவாக்கப்பட்டிருந்தது எப்படி என்பதையெல்லாம் வெளிப்படுத்தியது கீழடி ஆய்வு.

ஏறத்தாழ 35,00-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கீழடியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் நகர நாகரீகம் எவ்வளவு மேம்பட்டதாக இருந்தது என்பதை பறைச்சாற்றும் ஆய்வாக கீழடி அமைந்தது. 

இந்த ஆய்வினை தமிழகத்தை சேர்ந்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்டிருந்தார். ஆய்வு நடைபெற்றபோது அங்கு கிடைத்த பொருட்களை மைசூருக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடைபெற்ற போது அந்த முயற்சிகளை தடுத்து, கீழடியிலேயே ஒரு அருங்காட்சியகம் உருவாக்க பல்வேறு அறிஞர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். அதில் எங்களது பங்களிப்பும் சிறிது உண்டு.

தமிழகத்தில் ஏன் இத்தகைய ஆய்வுகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்றால், தமிழினத்தின் பெருமையை வெளி உலகம் தெரிந்துக் கொள்ளக் கூடாது என்று மத்திய அரசு செயல்படுகிறது. 

இந்திய பண்பாட்டு வரலாற்றில் சமஸ்க்ருதத்திற்கு எதிராக இன்றளவும் போர் தொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு மொழி என்றால் அது தமிழ் தான். சமஸ்க்ருத மொழிவழி பண்பாடு, தமிழ் மொழி வழி பண்பாடு இரண்டும் அடிப்படையில் முரண்பட்டவை. 

அந்த வகையில், சமஸ்க்ருத பண்பாட்டை உயர்த்துவதற்கும், அதன் வல்லாண்மையை நிலைப்படுத்துவதற்குமான ஒரு முயற்சியாக தமிழின பண்பாடுகள் புறக்கணிக்கப்படுகின்றன. பண்பாட்டு வரலாறுகள் சிதைக்கப்படுகின்றன. தமிழகத்தின் தொல்லியல் வரலாறுகள் எல்லாம் அழிக்கப்படுகின்றன அல்லது முடக்கப்படுகின்றன.

உண்மையிலேயே இதை ஒவ்வொரு தமிழனனும் உணர்ந்து கண்டிக்க வேண்டிய நிலையில் தான் இந்த அகழ்வாய்வின் முடக்கம் அமைந்துள்ளது.”

நேர்காணல் : கோ பிரின்ஸ்