வியாழன், 20 அக்டோபர், 2022

எதிர்க்கட்சி ஒருங்கிணைப்பு சாத்தியமா?

 


20 10 2022

கார்கே 5 சவால்கள்.. ஸ்டாலின், உத்தவ்.. எதிர்க்கட்சி ஒருங்கிணைப்பு சாத்தியமா?
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

காங்கிரஸ் தலைவருக்கான கடும் போட்டியில், அக்கட்சியின் திருவனந்தபுரம் மக்களவை எம்.பி., சசி தரூரை தோற்கடித்து மல்லிகார்ஜூன கார்கே தலைவராக புதன்கிழமை (அக்.19) தேர்ந்தெடுக்கப்பட்டார். 80 வயதான மல்லிகார்ஜூன கார்கே முன்னால் பல சவால்கள் உள்ளன.

தோல்வி இல்லாத தலைவர்

மல்லிகார்ஜூன கார்கே கன்னடர்களால் தோல்வி இல்லாத தலைவர் என அழைக்கப்பட்டார். 2019 நாடாளுமன்ற தேர்தல் தவிர அவர் இதுவரை தேர்தலில் தோல்வியுற்றதே கிடையாது. ஆகையால் கன்னடர்கள் அவரை சொல்லிலடா சர்தாரா (solillada sardara- தோல்வியில்லாத தலைவர்) என அழைத்தனர்.
இந்த நிலையில் கார்கே முன்னால் தற்போதுள்ள முக்கிய சவால், தோல்வி நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பி வெற்றிக்கு அழைத்து செல்வதே ஆகும். அந்த வகையில் அவர் முன்னால் உள்ள 5 சவால்களை பார்க்கலாம்.

1) காங்கிரஸ் மறுவடிவமைப்பு

காங்கிரஸால் பழைய பாணியில் இன்னமும் செயல்பட முடியாது. பழங்கதை பெருமை பேசி பெருமிதம் கொள்ள உரிமைகள் இருந்தாலும் அதனால் பலன் இல்லை. ஆகவே கட்சிக்கு புதிய வடிவம் ஒன்றை வழங்க வேண்டும்.
கட்சியின் செய்திகள், அணுகுமுறைகள் புதிதாகவும் இருத்தல் வேண்டும். இந்துத்துவா, பொருளாதாரம், தேசியவாதம் என கட்சிக்குள் பலவித கருத்துள் உள்ளன.
இது கட்சி ஆழமாக பிளவுப்பட்டுள்ளதை காட்டுகிறது. மேலும் பாரத் ஜோடோ யாத்திரையில் கட்சியை அனைவருக்குமானதாக நிறுத்த வேண்டும்.
கடந்த மாதம் விளிம்புநிலைக் குழுக்கள், ஆர்வலர்கள், தொழில்முனைவோர், தினக்கூலிகள், சிறு மற்றும் நடுத்தர வணிகர்களின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்துப் பேசினார். ஆனால் கட்சியின் செய்தி தெளிவற்றதாகவே உள்ளது.

மறுபுறம் இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. மேலும், 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் 11 மாநிலங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. இது அவர் முன் இருக்கும் மிகப்பெரிய சவால் ஆகும். இதில் கார்கேவின் சொந்த மாநிலமான கர்நாடகாவும் வருகிறது.

2) சுயம் அல்லது காந்தி குடும்ப குரல்

தாம் நேரு-காந்தி குடும்பத்தின் பினாமி அல்ல என்பதை நிரூபிப்பதே அவர் முன்னால் உள்ள உண்மையான சவால் ஆகும். அவர் தனது சுதந்திரத்தை எப்படி வெளிப்படுத்த போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏனெனில் அவர் கவனமாக செல்லாவிட்டால், தந்திர சதியில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். இதற்கிடையில், “காங்கிரஸ் தலைவர் தான் கட்சியில் உச்ச அதிகாரம் உள்ளவர் என்றும், ஒவ்வொரு தலைவரும் அவரிடம் அறிக்கை அளிக்க வேண்டும்” என்றும் ராகுல் காந்தி புதன்கிழமை கூறினார்.

மறுபுறம் அவரது உடல் மொழி கவனிக்கப்படும். காங்கிரஸிற்கு பட்டியலின (தலித்) சமூகத்தில் இருந்து ஒரு தலைவர் கிடைத்துள்ளார். அந்த வகையில் மறைந்த தலைவர் ஜக்ஜீவன் ராமுக்கு பிறகு கிடைத்த இரண்டாவது தலித் தலைவர் ஆவார்.
மேலும் கார்கே இந்தி பேசும் மக்களோடு எப்படி பொருந்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

3) காங்கிரஸ் – எதிர்க்கட்சிகள் ஒற்றுமை

மற்ற காங்கிரஸ் தலைவர்கள் போல் கார்கேவும் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்.
ஆனால் தற்போது நிலைமை மாறிவருகிறது. காங்கிரஸ் அணியில் இருந்து எதிர்க்கட்சிகள் சப்தமில்லாமல் வெளியேறி வருகின்றன. மறுபுறம் காங்கிரஸ் புத்துயிர் பெற போராடிவருகிறது.

அந்த வகையில் சரத் பவார், மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், நிதிஷ் குமார், உத்தவ் தாக்கரே என பிராந்திய தலைவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.
இதற்கிடையில் மற்றொரு கட்சியும் எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என நினைக்கிறது. இன்று தனிப்பெரும் கட்சியாக பாஜக விளங்கினாலும், எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ்தான் உள்ளது. இந்த உண்மையை உணர்ந்துதான் லாலு சோனியா காந்திக்கு முழு ஆதரவு அளிக்கிறார்.

4) கட்சி அமைப்பு சீர்திருத்தம்

கட்சியை சீரமைப்பது கார்கேவிற்கு மிகப்பெரிய சோதனையாக இருக்கும். காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு (CWC) தேர்தலை நடத்துவதற்கு அவர் அழுத்தம் கொடுப்பாரா என்பது முதல் கேள்வி.
ஏனெனில், குழுவில் கட்சித் தலைவர், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் 23 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று காங்கிரஸ் அரசியலமைப்பு கூறுகிறது,

ஏற்கனவே கார்கே அதிருப்தி காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். இது தொடர்பாக முன்னர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அவர் கூறுகையில், “அது முடிந்துவிட்டது” எனத் தெரிவித்து இருந்தார்.
எனினும் கட்சியின் உதய்பூர் பிரகடனத்தை செயல்படுத்துவது குறித்து பலமுறை பேசியுள்ளார். அதில், இளைய தலைமுறையினருக்கு பதவி, ஒரு நபருக்கு ஒரு பதவி, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு என உள்ளது.

5) தலைமுறை இடைவெளியை குறைத்தல்

கட்சியில் உள்ள இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பது கார்கேவின் முன் உள்ள ஒரு பெரிய சவால்.
AICC ஸ்தாபனத்தின் வேட்பாளராக கார்கே காணப்பட்டார்; எனவே, அனைத்து வயதினரின் தலைவர்களும் அவருக்கு ஆதரவளித்தனர். ஆனால் இளம் தலைவர்கள் மற்றும் மூத்த வீரர்களுக்கு இடையேயான பிளவு பல மாநிலங்களில் காணப்படுகிறது.

குறிப்பாக ராஜஸ்தானில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் சண்டை மூண்டுள்ளது. ராஜஸ்தான் மட்டும் இல்லை. கேரளா, தெலுங்கானா, கோவா, டெல்லி, பஞ்சாப் என பல மாநிலங்களிலும் இது உள்ளது.
சசி தரூரின் வேட்புமனு சில இளம் தலைவர்களை உற்சாகப்படுத்தியது மற்றும் கட்சியில் பலர் மாற்றம் தேவை என்று நம்புவதற்கு ஒரு சமிக்ஞையாக இருக்கலாம்.

தே வேளையில், ராகுல் காந்தியும் அவரது முகாமும் பிரியங்கா காந்தி வத்ராவும் சுறுசுறுப்பாக உள்ளனர். இளம் முகங்களை தலைமைப் பாத்திரங்களில் கொண்டு வருவதற்கு உதய்பூர் பிரகடனத்தின் முக்கியத்துவம் கார்கேவின் வேலையை மிகவும் எளிதாக்கும்.
ஒருவேளை, நேரு- காந்தி குடும்பம் ஒதுங்கிக் கொள்வதற்கான முடிவை மனதில் வைத்துக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.


source https://tamil.indianexpress.com/india/five-challenges-before-mallikarjun-kharge-reimagining-congress-to-bridging-generational-divide-528193/