புதன், 26 அக்டோபர், 2022

சென்னையில் 211 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்

 

25 10 2022

சென்னையில் 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையின்போது சேகரிக்கப்படும் பட்டாசுக் கழிவுகள், அபாயகரமான கழிவுகள் என்பதால் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இக்கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டன. இவற்றை கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க
நிலையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் கூடுதலாக சேகரிக்கப்படும் பட்டாசுக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக அந்தந்த மண்டலங்களில் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அக்டோபர் 23ஆம் தேதி அன்று 7.92 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகளும், அக்டோபர் 24ஆம் தேதி அன்று 63.76 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகளும், இன்று 139.40 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகளும் என மொத்தம் 211.08 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள், தூய்மைப்பணியாளர்கள் மூலம் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.


இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ள பட்டாசுக் கழிவுகளை கொண்டு செல்ல மண்டலத்திற்கு 2
வாகனங்கள் என 30 எண்ணிக்கையிலான தனி வாகனங்கள் மாநகராட்சியின் சார்பில்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள்
கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க
நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீதமுள்ள பட்டாசுக்
கழிவுகளை அனுப்பும் பணி நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி சார்பில்
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


source  https://news7tamil.live/211-metric-tons-of-firecracker-waste-disposal-in-chennai.html