வியாழன், 20 அக்டோபர், 2022

பாசிச சக்திகளுக்கு எதிராக போராட வேண்டும்: கார்கே

 19 10 2022

வகுப்புவாத போர்வையில் ஜனநாயக அமைப்புகளை தாக்கும் பாசிச சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில், மல்லிகார்ஜூன கார்கே பெரும்பான்மை ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள மல்லிகார்ஜுன கார்கே அக்டோபர் 26ம் தேதி பொறுப்பேற்பார் என காங்கிரஸ் எம்.பி. ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

இந்தநிலையில், காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வகுப்புவாத போர்வையில் ஜனநாயக அமைப்புகளை தாக்கும் பாசிச சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும். கட்சியில் பெரியவர், சிறியவர் என அனைவரும் கட்சித் தொண்டர்களைப் போல் நாம் அனைவரும் ஒத்துழையுடன் உழைக்க வேண்டும்.

என்னுடன் போட்டியிட்ட சசி தரூரை வாழ்த்த விரும்புகிறேன். அவரைச் சந்தித்து கட்சியை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று ஆலோசித்தேன். அனைத்துக் கட்சி தொண்டர்கள் சார்பாக சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தியிடம் வாழ்த்து பெற்றார்.



source https://news7tamil.live/must-fight-against-fascist-forces-karke.html