ஞாயிறு, 23 அக்டோபர், 2022

புதுச்சேரி மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு; அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 


புதுச்சேரி மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய கடற்படை அதிகாரிகள் மீது  மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தை
சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டம்
வானகிரி கிராமத்தைச் சேர்ந்த வீரவேல், செல்வகுமார், செல்லத்துரை உள்ளிட்ட
பத்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

கடந்த 15ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலை இந்திய எல்லைப் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் பங்காரம் (INS BANGARAM) பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திய கடற்படை கப்பலை கண்ட மீனவர்கள் இலங்கை கடற்படை கப்பல் என தவறுதலாக நினைத்து அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்தப் பகுதியில் இருந்து விசைப்படகை வேகமாக செலுத்தினர். இதனைக் கண்ட இந்திய கடற்படையினர் மீனவர்களை எச்சரித்துள்ளனர். ஆனால் மீனவர்கள் படகை நிறுத்தாமல் சென்று கொண்டிருந்ததால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் வீரவேல் என்பவருக்கு தொடை மற்றும் வயிறு பகுதியில் துப்பாக்கி கொண்டு பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார். அவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விசைப்படகை மண்டபம் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் மீனவர்களின் படல்களையும் கடற்படையினர் நள்ளிரவு ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் 9 பேரும் நாகை மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்திய கடற்படை அதிகாரிகள் மீனவர்களை கைகளை கட்டி இரும்பு ராடால் தொடர்ந்து
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கப்பலில் வைத்து தாக்கியதாகவும், சுமார் 18 மணி
நேரத்திற்கு மேலாக உணவு குடிநீர் வழங்காமல் கொடுமைப்படுத்தியதாகவும்
பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் அத்துமீறலில் ஈடுபட்ட
கடற்படை அதிகாரிகள் மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை விட்டுத்தனார்.

source https://news7tamil.live/firing-on-puducherry-fishermen-demand-for-government-action.html