திங்கள், 24 அக்டோபர், 2022

துப்பாகிச் சூடு எதிரொலி; இந்திய கடற்படையை கண்டித்து போஸ்டர்

 23 10 2022

நாகை மற்றும் காரைக்காலில் இந்திய கடற்படையை கண்டித்து மீனவர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும் அவர்கள் அச்சமின்றி தொழில் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த வீரவேல், செல்வகுமார், செல்லத்துரை உள்ளிட்ட பத்து மீனவர்கள் மீன் பிடிக்க கடந்த வாரம் கடலுக்கு சென்றனர்.

அப்போது அங்கு வந்த இந்திய கடற்படை கப்பலில் இருந்த வீரர்கள், திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் வீரவேல் என்கிற மீனவர் மீது குண்டு பாய்ந்தது. இதனையடுத்து படுகாயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்திய கடற்படையினர் இரும்பு கம்பியால் தாக்கியதில், படகில் இருந்த 9 மீனவர்களும் காயமடைந்தனர். அவர்கள் நாகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து காரைக்கால் துறைமுகம், காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, மண்டபத்தூர்,  மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீனவர்கள் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.

மேலும் இதுவரை இலங்கை கடற்படை மட்டுமே தமிழக, புதுச்சேரி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வந்தனர். ஆனால் தற்போது இந்திய கடற்படையே தாக்குதல் நடத்தி இருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், கன்னியாகுமரி முதல் பழவேற்காடு வரை உள்ள மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

source https://news7tamil.live/gunfire-echoes-a-poster-condemning-the-indian-navy.html