சனி, 19 நவம்பர், 2022

தினம் தினம் விசாரணை… நிம்மதியே போச்சு

 ‘தினம் தினம் விசாரணை… நிம்மதியே போச்சு!’ கோவை கார் வெடிப்பு நிகழ்ந்த பகுதி வாசிகள் குமுறல்

Coimbatore cylinder blast

கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலம் எந்தவித நடவடிக்கை இல்லாமல் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கிரீன் கார்டன் குடியிருப்போர் பொது நலச் சங்கத்தினர் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது; கடந்த 23.10.2022 அன்று அதிகாலை நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்மந்தமாக உக்கடம் வின்சென்ட் ரோடு கிரீன் கார்டர் குடியிருப்பு பகுதியில் இருக்கும் குடியிருப்பு வாசிகளிடம் காவல்துறையின் துரித விசாரணை நடைபெற்றது.

அதற்கு கிரீன் கார்டன் குடியிருப்போர் பொது நல சங்கமும் காவல் துறைக்கு எல்லா விதமான ஒத்துழைப்பும் வழங்கியது.

பிறகு கடந்த ஒரு வாரமாக  வீடு வீடாக சென்று குடியிருப்பு வாசிகளின் கணக்கெடுப்பும் விசாரணையும் நடைபெற்றது.

தற்பொழுது மீண்டும் வீட்டு உரிமையாளர்கள் பெயரும் அவர்களின் விபரமும், வாடகைக்கு குடியிருப்போரின் விபரமும், எதற்காக வாடக்கைக்கு கொடுத்தீர்கள் என்ற விபரமும் விசாரிக்க மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்தார்கள்.

விவரம் அறிந்த சங்க நிர்வாகிகள் 08.11.2022 அன்று B-4 காவல் ஆய்வாளரை அணுகி அத்தனை பேரையும் காவல் நிலையத்திற்கு அழைப்பது சரியாகாது என்பதனை எடுத்துரைத்த பிறகு, 09.11.2022 அன்று காலை குடியிருப்போர் சங்கத்திற்கு காவல்துறை உதவி ஆய்வாளரை அனுப்பி விட்டு உரிமையாளர்களை நேரில் வரவழைத்து விசாரித்து விவரம் மற்றும் கடிதம் சேகரிப்பதற்காக வந்தார்கள்.

23.10.2022 அன்று நடைபெற்ற சம்பவத்துக்கு காவல்துறை எடுத்த எல்லா விதமான விசாரணைக்கும் நடவடிக்கைகளுக்கும் கிரீன் கார்டன் குடியிருப்போர் பொது நலச்சங்கமும், குடியிருப்பு வாசிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில் தினம் தினம் விசாரணை எனும் பெயரில் சுமார் 50 ஆண்டு காலம் குடியிருந்து வந்த வீட்டு உரிமையாளர்களை அழைத்து வாடகைக்கு எப்படி நீங்கள் விடலாம் என கேட்டும் உரிமையாளரின் ஆதார் நம்பரையும் வாங்கி அதை கடிதமாக எழுதி கையெழுத்து வாங்கினார்கள்.

பிறகு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு காவல் துறை 168 குடும்பங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை (சட்ட நடவடிக்கை) எடுக்க காவல் துறை புகார் அளித்துள்ளதாக கூறிய தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திலிருந்து நேற்று 16.11.2022 அன்று காவல் துறை கொடுத்த புகார் பட்டியலை விசாரித்து சென்று உள்ளார்கள்.

இன்றும் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் 50 ஆண்டு காலம் கோவை கோட்டை வின்சென்ட் ரோடு, கிரீட் கார்டன் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் ஏழை குடும்பங்கள் மீதும் வீடுகளின் மீதும் எந்தவித நடவடிக்கையும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நடவடிக்கை இல்லாமல் இருக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்வதாக குறிப்பிடுள்ளனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்


source https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-cylinder-blast-coimbatore-blast-accused-543784/