புதன், 23 நவம்பர், 2022

சானிட்டரி நாப்கின்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

 22 11 2022


இந்தியாவின் பிரபல நிறுவனங்களால் தயாரிக்கப்படும் சானிட்டரி நாப்கின்களில், பெண்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் பல ரசாயனங்கள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெண்கள் பருவமடைந்த பின்னர் ஒவ்வொரு மாதமும் ஏற்படக்கூடிய மாதவிடாய் சுழற்சியின்போது, வெளியாகும் இரத்தத்தை சேகரிப்பதற்கும், சுகாதாரத்தை பேணுவதற்கும் சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவின் பிரபல நிறுவனங்களால் தயாரிக்கப்படும் சானிட்டரி நாப்கின்களில், புற்றுநோயை ஏற்படுத்தும் பல ரசாயனங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஆய்வு ஒன்றை நடத்திய, புது டெல்லியைச் சேர்ந்த, சர்வதேச மாசு ஒழிப்பு நெட்வொர்க்குடன் தொடர்புடைய, Toxics Link என்ற நிறுவனம், நவம்பர் 21ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தியாவில் தயாரிக்கப்படும் 10 வகையான சானிட்டரி நாப்கின்களில் Carcinogens, Reproductive Toxins, Endocrine Disruptors மற்றும் Allergens போன்ற பெண்களுக்கு ஆபத்து விளைவிக்கும் ரசாயனங்கள் அதிகம் இடம்பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் Carcinogens மற்றும் Reproductive Toxins போன்ற ரசாயனங்கள், பெண்களுக்கு புற்றுநோய் மற்றும் மலட்டுத் தன்மை உருவாக வழிவகுக்கும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் இந்த ரசாயனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த எந்த கட்டாய விதிகளும் இல்லாத நிலையில், நாப்கின் உற்பத்தியாளர்கள் இந்த ரசாயனங்களால் பெண்களுக்கு ஏற்படும் நீண்டகால பாதிப்புகள் குறித்து கவனம் செலுத்துவதில்லை என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் நான்கில் மூன்று இளம் வயது பெண்கள், சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதாக தேசிய குடும்ப நல ஆய்வு தெரிவித்துள்ளது. சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் பெண்கள், சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தி வரும் நிலையில், அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்களால் உயிருக்கே ஆபத்து என்ற ஆய்வு முடிவுகள், பெண்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


source https://news7tamil.live/cancer-causing-chemicals-in-sanitary-napkins-shocking-information-in-study.html