புதன், 28 டிசம்பர், 2022

தீண்டாமை; வாட்ஸ் அப்பில் புகார் தரலாம்- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 27 12 2022

தீண்டாமை குறித்து வாட்ஸ் அப்பில் புகார் தரலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளனூர் அருகே வேங்கவயல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில், மனிதக்கழிவு கலந்திருந்தது. இததனை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்தனர். இது தொடர்பான புகார்படி, வெள்ளனூர் போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதியை நேற்று ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட எஸ்.பி., வந்திதா பாண்டே ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதி மக்கள் டீக்கடையில் இரட்டை டம்பளர் முறை இருப்பதாகவும், அய்யனார் கோவிலுக்குள் எங்களை அனுமதிக்கவில்லை எனவும் புகார் செய்தனர்.

இதைதொடர்ந்து, உடனடியான மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, பட்டியல் இன மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்றார். மேலும் அங்குள்ள டீக்கடைகயில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தினார்.இந்நிலையில், தீண்டாமை குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் ஒன்றை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜாதி மத இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கோயில்களில் ஜாதி ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டாலோ, முடி திருத்தங்களில் ஜாதியை வேறுபாடு காணப்பட்டாலோ, சட்ட ரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது போன்ற குற்றங்கள் எந்த வடிவில் இருந்தாலும் 94433 14417 என்ற whatsapp என் மூலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியல் அறிவித்துள்ளார்.


source https://news7tamil.live/untouchability-you-can-file-a-complaint-on-whatsapp-pudukottai-district-collector-notification.html