வெள்ளி, 23 டிசம்பர், 2022

புதிய வகை கொரோனா;

 22 12 2022

தமிழ்நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா இதுவரை இல்லை. மக்களுக்கு தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். எத்தகைய பாதிப்பையும் எதிர்கொண்டு மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார்.

அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் திடீரென வேகமெடுத்துள்ளது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள் தான். இந்த வைரஸ் பிஏ.5 வைரசின் உள்வகையாகும். இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது.

இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் தொடர்ந்து இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளிடம், மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா இதுவரை இல்லை. பொதுமக்களுக்கு தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். எத்தகைய பாதிப்பையும் எதிர்கொண்டு மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் உள்அரங்குகளில், சமூக இடைவெளியை கடைபிடிப்பது, நோய்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை அணுகி மருத்துவர்களின் ஆலோசனையின்படி, கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறவும் அறிவுறுத்தினார். மேலும் சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்ய அறிவுறுத்தினார்.


source https://news7tamil.live/a-new-type-of-corona-people-need-not-fear-chief-minister-m-k-stalin.html