வியாழன், 22 டிசம்பர், 2022

வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட தமிழக அரசு வலியுறுத்தல்

 22 12 2022

தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் புதிதாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட மத்திய அரசுக்கு தமிழக சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இயக்குநருக்கு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் அவசர கடிதம் எழுதியுள்ளார். அதில் சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஒமிக்ரான் பிஎப். 7 வைரஸ் தொற்று வகையே, திடீர் தொற்று பரவல் அதிகரிப்பிற்கு காரணம் என்று உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளதாகவும் அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் குறைவாக இருந்து வரும் நிலையில், சீனா மற்றும் ஹாங்காங்கில் பரவி வரும் கொரோனா காரணமாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கடித்தத்தில் குறிப்பிட்டுள்ள தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர், சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட வலியுறுத்தியுள்ளார்.



source https://news7tamil.live/compulsory-screening-for-foreign-travelers-tamil-nadu-govt-urges-to-publish-guidelines.html