சனி, 24 டிசம்பர், 2022

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 24 12 2022

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக  ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு11:30 மணி நிலவரப்படி நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 610 கிலோ மீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது 48 மணி நேரத்தில் மேற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரி கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,
நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட8 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்
பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை
ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள் ,குமரி கடல் பகுதிகள்
மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55
கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்  இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

source https://news7tamil.live/chance-of-rain-in-7-districts-in-tamil-nadu-in-next-3-hours.html