செவ்வாய், 30 ஏப்ரல், 2024

இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்! தமிழ்நாடு மீனவர்களை தாக்கிக் கொள்ளை!

 

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி அவர்கள் வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிளான பொருள்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்து தமிழ்நாடு மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்நிலையில், கோடியக்கரை நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி மீனவர்களின் படகுகளில் ஏறினர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்பு ஆயுதங்களாலும் கட்டைகளாலும் கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும் தமிழ்நாடு மீனவர்களின் வலை, ஜிபிஎஸ் கருவி, செல்ஃபோன், டார்ச் லைட் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இலங்கை கடற்கொள்ளையர்கள்  கொள்ளை அடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியிருக்கின்றனர்.

இதையடுத்து, இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்பு ஆயுதங்களாலும் கட்டைகளாலும் கடுமையாக தாக்கியதில் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் முருகனுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதில், அந்த மீனவரின் தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், நாகை அடுத்த ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலை மற்றும் கையில்  17 தையல்கள் போடப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


source https://news7tamil.live/sri-lankan-pirates-serial-atrocities-attack-on-tamilnadu-fishermen.html