புதன், 31 ஜூலை, 2024

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்? தேர்வுத் துறை முக்கிய அறிவிப்பு

 Tn sslc exam

இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் பங்கேற்ற மாணவர்களில் சிலர் விடைத்தாள் நகல் கேட்டும், மறு கூட்டல், மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான விடைத்தாள் நகல்கள் கடந்த வாரம் விநியோகம் செய்யப்பட்டு, தற்போது மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. அதன்தொடர்ச்சியாக மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றுகள் அல்லது மதிப்பெண் பட்டியல் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. 

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; “இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 01.08.2024 அன்று முதல் வழங்கப்படும்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் (Original Mark Certificates) / (Statement of Mark) சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-hsc-12th-exam-mark-certificates-available-from-august-1-in-schools-6712671