செவ்வாய், 30 ஜூலை, 2024

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவி தொகை உயர்வு - ஸ்டாலின் அறிவிப்பு

 fisherman stalin .

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வு குறித்தும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது குறித்தும், இதனால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் எடுத்துரைத்தனர்.

இராமநாதபுரம், புதுக்கோட்டைதஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் ஜூலை 26-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.

அப்போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வு குறித்தும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது குறித்தும், இதனால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் எடுத்துரைத்தனர். மேலும், தங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றி தருமாறு மீனவ சங்கப் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.

அதோடு, மீனவ சங்கப் பிரதிதிகள், பாம்பன் தூக்குப்பாலம் அருகே கால்வாய் தூர்வாரவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 87 மீனவர்களையும், கைப்பற்றப்பட்டுள்ள 175 படகுகளையும் மீட்டுத்தர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் மீனவ சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்.

மீனவர் சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை பரிசீலித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு தின உதவித்தொகையாக தற்போது நாளொன்றுக்கு 250 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்திட தின உதவித்தொகையை நாளொன்றுக்கு 350 ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் நலன் கருதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் இரு தவணைகளில் 151 படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டார்.

அந்த அடிப்படையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியியிலிருந்து விசைப்படகுகளுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் மற்றும் நாட்டுப் படகுகளுக்கு தலா 1.5 இலட்சம் ரூபாய் என மொத்தம் 6.74 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது, இலங்கை கடற்படையினரால் 2018 முதல் 2023-ம் ஆண்டு வரை கைப்பற்றப்பட்டு அங்கு நெடுங்காலமாக உள்ள 127 மீட்க இயலாத படகுகளுக்கு கடந்த ஆண்டுகளில் வழங்கிய நிவாரண தொகையினை விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தியும், நாட்டுப்படகுகளுக்கு வழங்கப்பட்டுவந்த 1.5 லட்சம் ரூபாயை 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால்மீனவர்கள் ரூ.6.82 கோடி அளவிற்கு பயனடைவார்கள்.

மேலும், பாம்பன் தூக்குப்பாலம் அருகே தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அதன் அடிப்படையில் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 87 மீனவர்களையும், கைப்பற்றப்பட்டுள்ள 175 படகுகளை நேரடியான நிலையான தூதரக நடவடிக்கை மூலமாக மீட்டுத்தரவும், கைப்பற்றப்பட்டுள்ள படகுகளை ஆய்வு செய்ய குழுவினரை அனுமதிக்கவும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை, மீனவச் சங்கப் பிரதிநிதிகள் சந்திக்கவும், கூட்டுப் பணிக்குழு கூட்டத்தினை நடத்திடவும் முதலமைச்சர் அவர்கள் இந்தியப் பிரதமர் அவர்களையும், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களையும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.

எனவே, இந்த சூழ்நிலையின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தில் இப்பொருள் குறித்து பேசிடவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, விரைவில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண வலியுறுத்துமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-order-to-increase-in-aid-to-families-of-fishermen-languishing-in-sri-lankan-prisons-6711403