புதன், 7 ஆகஸ்ட், 2024

வங்கதேசத்தில் அமையும் இடைக்கால அரசு | தலைமையேற்கும் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ்!

 

வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நிலைமை மோசமானதை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். மேலும், இடைக்கால அரசு அமைப்பது குறித்து முப்படைகளின் தலைவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் குழுக்களின் பிரிதிநிதிகள் கொண்ட 13 பேருடன் நேற்று அந்நாட்டு அதிபர் ஷஹாபுதீன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸை இடைக்கால தலைவராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முகமது யூனுஸ் அதிபர் முகமது ஷஹாபுதீனால் நியமிக்கப்பட்டார்.



source https://news7tamil.live/mohammad-yunus-appointed-as-the-head-of-the-interim-government-of-bangladesh.html