ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் தீர்ப்பு வரும் வரை பிரதமர் பதவியில் நரேந்திர மோடி விலகியிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தை, உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் எனவும் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று திரினாமூல் காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டெரெக் ஓ பிரீன், மோடிக்கு எதிரான இந்த குற்றச்சாட்டை 2014ம் ஆண்டே, தங்கள் கட்சி முன்வைத்ததாகக் குறிப்பிட்டார்.
எனினும், ராகுல் காந்தி தற்போது இப்பிரச்னையை எழுப்பியிருப்பதை தங்கள் கட்சி வரவேற்பதாகவும், இவ்விஷயத்தில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் மோடி மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இது மிக ஆழமான குற்றச்சாட்டு என தெரிவித்துள்ளார்.
எனவே, இதுபற்றி முழுமையாக விசாரிக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் கூறியுள்ளார். இதே கருத்தை வலியுறுத்தியுள்ள சிபிஐ-யின் தேசிய செயர் டி. ராஜா, மக்கள் உண்மையை அறிய உயர் மட்ட விசாரணை தேவை என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, குஜராத்தின் மெசானா (Mehsana) நகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நரேந்திர மோடி, குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது, சஹாரா மற்றும் பிர்லா நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://ns7.tv/ta/prime-minister-narendra-modi-arvind-kejriwal-urges-resignations.html