செவ்வாய், 27 டிசம்பர், 2016

ஜெயலலிதா இருந்தால் இப்படி நடந்திருக்குமா?.. ராம மோகன ராவ்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தால் தலைமைச் செயலகத்திற்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்திருக்க முடியுமா என ராம மோகன ராவ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இப்போது உயிருடன் இருந்திருந்தால் மத்திய அரசுக்கு இந்த தைரியம் வந்திருக்காது என்றார். தலைமை செயலகத்துக்குள் துணைநிலை ராணுவத்தை அவர்கள் துணிச்சலுடன் அனுப்பி இருப்பார்களா? என்று கேள்வி எழுப்பினார். மத்திய அரசுக்கு இந்த விஷயத்தில் எந்த துணிச்சலும் இல்லை. என்னை இடமாற்றம் செய்யும் தைரியம் கூட மத்திய அரசுக்கு கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தன்னை மறைந்த முதலமைச்சர் தலைமைச் செயலாளராக நியமித்த உத்தரவு அப்படியேதான் இருக்கிறது என்றும், தான்தான் இன்னும் தலைமைச் செயலாளராக நீடிப்பதாகவும் ராம மோகன ராவ் கூறினார்.
Ramamohana rao
ஜெயலலிதா மறைவுக்குப் பின் மாநில அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மரியாதை இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழகத்திற்கு பாதுகாப்பு இல்லை. யாரும் யாருடைய வீட்டிற் குள்ளும் நுழையலாம் என்ற நிலை உள்ளது என்றும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தன்னை குறி வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். கடந்த 7 மாதங்களாக ஜெயலலிதா உத்தரவுப் படிதான் செயல்பட்டு வந்ததாகவும் வருமான வரி சோதனையில் சிக்கிய சேகர் ரெட்டியுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவின் வீட்டில் டிசம்பர் 22ம் தேதி வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் பல லட்சம் ரூபாய், தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து தலைமை செயலகத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணி அளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி, ராம மோகன ராவ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உடல்நிலை சீரானதால் நேற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.