வெள்ளி, 30 டிசம்பர், 2016

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டால் கொம்பு முளைத்துவிட்டதாக அர்த்தமா? – ராம் மோகனராவுக்கு முன்னாள் தலைமை செயலாளர் ராகவன் கேள்வி

தான் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் என்று கூறுவதால் ராம்மோகனராவுக்கு தலையில் கொம்பு முளைத்துவிட்டதா? என முன்னாள் மூத்த தலைமை செயலாளர் (ஓய்வு) ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார். 
இது குறித்து தமிழ் இந்து  நாளிதழில் அவர் கூறியுள்ள கருத்து வருமாறு..
அதிகார மையத்தின் உச்சியில் இருப்பவர்களை ப்யூரோகிராட்டுகள் என்பார்கள் , அவர்களை பொதுவாக மக்கள் விரும்புவதில்லை , இதற்கு ‘ப்யூரோக்ராட்’டுகளின் நடத்தையும், அவர்கள் மக்களை அணுகும் அகங்காரத் தோரணைகளும் பிரதான காரணமென்பதை மறுப்பதற்கில்லை.இருப்பினும், ‘ப்யூரோக்ராட்’டும் ஒரு மனிதர்தான். 
இன்னொரு விளைவையும் கவனிக்க வேண்டும். எந்த ஆயுதமும் தனக்கெதிராகவே செயல்படாது. ஒரு கத்தி தன்னைத்தானே அறுக்காது; ஒரு துப்பாக்கி தன்னைத்தானே சுட்டுகொள்ளாது. காவல் துறை, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்களிடம், அந்தந்தத் துறையினரே ரெய்டுகளோ மற்ற குற்றத் தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொண்டதாகக் கேள்விப்பட்டதுண்டா?.
ராம மனோகர ராவின் ஊடகப் பேட்டிக்கு வருவோம். அவர் ஒரு ‘ப்யூரோக்ராட்’ அல்லது ஐ.ஏ.எஸ். என்பதாலேயே அவர் சொல்வதெல்லாம் அபத்தம் என்று எடுத்துக்கொள்வது சரியல்ல. 
அதே சமயம் தான் இன்னும் தலைமைச் செயலர்தான், ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டதாலேயே, தான் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தக் கூடாதவர் என்றெல்லாம் அவர் அரசுக்குச் சவால் விடுவது ஏற்கத்தக்கதல்ல.
 அவரது இடத்தில் இன்னொருவரை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துவிட்ட நிலையில், அதை மதித்து நடப்பதுதான் நாகரிகம். தலைமைச் செயலராக இருந்தவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். 
விதிகளுக்கோ, நியாயத்திற்கோ அந்த ஆணை புறம்பானதென்று அவருக்குப் பட்டால், அதை நிர்வாக ஆணையத்திலோ, நீதிமன்றத்திலோ முறையிட தனக்கு இருக்கும் உரிமையை அவர் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டதாலேயே தனக்குக் கொம்பு முளைத்துவிட்டது என்று நினைத்துக்கொள்வதும் சரியல்ல. ஜெயலலிதா, சில விஷயங்களில் தன்னைச் சார்ந்தவர்களைச் சரியாக எடை போடத் தெரியாதவராக இருந்தார் என்பது எனது கருத்து. இவ்வாறு கூறியுள்ளார்