வியாழன், 29 டிசம்பர், 2016

சசிகலா தலைமையில் அதிமுக... பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

சசிகலாவின் தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதியேற்று அதிமுகவின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அக்கட்சியின் அவசர பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடந்தது. முதலமைச்சர் பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இந்த பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியதும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், ஜெயலலிதா அமரக்கூடிய இருக்கையில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மூத்த அமைச்சர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், சசிகலாவின் தலைமையின் கீழ் விசுவாசமாக செயல்பட பொதுக்குழு உறுதியேற்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கட்சியின் தலைமைப் பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைக்கும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.