ஞாயிறு, 29 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடக்கிய நபர்கள் யார்? அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகம் காணாத ஒரு அறவழிப்போராட்டத்தை இன்றைய இளைஞர்கள் வெற்றியோடு நடத்திமுடித்திருக்கிறார்கள்.

காந்திய தேசத்திற்கு அகிம்சை, அறவழி என்றால் என்ன என்பதை பெரும் திரளான மாணவர்களும், இளைஞர்களும் எடுத்துக்காட்டியிருப்பதை கடந்த கடந்தவாரம் முழுவதும் பார்த்திருக்கிறோம்.

சர்வதேச சமூகமே தமிழகத்தை திரும்பிப்பார்த்தது.

எனினும், போராட்டத்தின் இறுதி நாளில் நடந்த நிகழ்வுகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு மட்டுமன்றி தமிழக காவல்த்துறையினர் மீது வெறுப்பினை ஏற்படுத்தியிருந்தது.

மாணவர்களின் இந்த அறவழிப் போராட்டத்தை அனைத்து தரப்பினரும் பாராட்டிய வேளையில், இறுதி அந்த நாள் என்ன நிகழ்ந்தது என்பது குறித்து இப்பொழுது மெல்ல, சில தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இன்றைய இளைஞர்கள், இணையத்தளத்தின் வாயிலாக தமக்குத் தேவையான அனைத்தினையும் பெற்றுக்கொள்கிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் எந்தத் தகவல்களாக இருந்தாலும், உடனுக்குடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இது தான் தமிழகத்தில் இந்தளவிற்குப் புரட்சி நிகழவும் காரணமாகவிருந்தது.

தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் லட்சக்கணக்கில் திரண்டு, போராட வந்ததுக்கு நிறையவே இந்த சமூக வலைத்தளங்கள் உதவி செய்திருக்கின்றன.

இதை இந்திய ஆளும் வர்க்கமும், தமிழக மாநில அரசாங்கமும் எதிர்பார்த்திருக்கவில்லை.

போராட்டம் பெரும் எதிர்ப்புக்களை காட்டும் என்பதை மட்டுமல்ல, இந்தப் போராட்டம் இவ்வளவு தூரம் பெரிதாகும் என்று கிஞ்சித்தும் கூட யாரும் நினைத்திருக்கவில்லை.

ஒருகட்டத்தில், மாணவர்களின் எதிர்ப்புக்களும், கண்டனங்களும் மத்திய அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக அமைந்தது.

இது புலனாய்வாளர்களின் அறிக்கை மூலமாக டெல்லிக்குப் பறந்தது. மாநிலத்தில் எழும் எதிர்ப்பானது சாதாரணமானதாக தென்படவில்லை. போராட்டம் பெரிதாகும் எனில் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படலாம் என்பது தான் மத்திய புலனாய்வுத்துறையினரின் தகவல்,

இதை டெல்லி உடன் பரிசீலனை செய்து கொண்டது. பிரதமரின் நேரடி கவனத்திற்கு கொண்டுவந்தனர் மூத்த அதிகாரிகள்.

எனினும் அவசரச் சட்டம் சட்டசபையில் நிறைவேற்ற வேண்டிய கட்டாய சூழல் இருந்தது. இதனைத் தான் மாணவர்கள் கேட்டார்கள்.

ஆனால், அதற்குள் இந்தப் போராட்டத்திற்கு ஒரு வழிகாட்ட வேண்டும், மாணவர்களுக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் இப்பொழுது வெளியாகியிருக்கிறது.

அதாவது, போராட்டத்தை திசை திருப்பும் வேலையை மிகத்துள்ளியமாக செய்தார்கள். பிரபலங்களின் வாய்களை திறக்க வைத்தார்கள்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கான மாணவர்களின் எழுச்சியானது திசைமாறிச் செல்கிறது. இங்கே ஜல்லிக்கட்டுப் பிரச்சினை பற்றி பேசவந்தவர்கள், அதைவிடுத்து, நாட்டை பிரிக்க வேண்டும்.

தமிழகம் தனிநாடு ஆகவேண்டும், வெளிநாட்டு பொருட்களுக்கு தடைவிதிக்க வேண்டும், பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்கள் என பெரும் கூச்சல்கள் இடம்பெற்றன என்பது உண்மையே.

இந்தப் போராட்டம் தொடங்கிய முதல் நாளில் இருந்தே இதே நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருந்தன.

தவிரவும், அவசர சட்டத்திற்கு ஆதரவு தரமுடியாது என மோடி முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் தெரிவித்த தகவல் வெளியான அடுத்த நிமிடமே இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது தமிழக மாணவர்களுக்கு அதீத வெறுப்பு ஏற்பட்டதுடன், அதை வெளிப்படையாக காண்பிக்கத் தொடங்கினர்.

ஆனால், இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு திசை திருப்பும் எண்ணத்தில் இருந்த சில சக்திகள், ஒரு சினிமா பிரபலத்தை வளைத்துப் போட்டனர்.

போராட்டம் திசை மாறிச் செல்வதாகவும், தான் இந்தப் போராட்டத்தில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் மூலமாக தெரியப்படுத்தினர்.

இது ஒருவகையான உளவியல் தாக்குதல் தான். இப்படி ஒரு போராட்டத்தில் முன்நின்ற நபர், திடீரென விலகுவதாக அறித்தால், உளவில் ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், அவரை இவ்விதம் பேச வைத்தனர்.

எனினும், மாணவர்கள் இந்தப் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை. மாறாக குறித்த பிரபலத்தை ஒதுக்குவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில் அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்தனர், அதிகாரத் தரப்பினர். அதாவது, போராட்டக்காரர்களை வெளியேற்றுவது என்னும் முடிவு.

அதிகாலை யாருமே எதிர்பார்க்காத வண்ணம், சென்னை மெரீனா கடற்கரைக்குச் செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்தது தமிழகக் காவல்த்துறை.

போராட்டக்காரர்களை உடனே வெளியேறுமாறு உத்தரவிட்டனர். ஆனால், மாணவர்கள் வெளியேற மறுத்தனர். 2மணிநேரம் அவகாசம் கேட்டனர். கொடுக்கமறுத்தனர்.

மேலிடத்தின் பேரில், மாணவர்கள் மீது வன்முறையினை கட்டவிழ்த்துவிட்டனர் காவல்த்துறையினர்.

மாணவர்களுக்கு உதவ வந்த மீனவர்களையும், தாக்கினர். அவர்களின் குடிசைகளை காவல்த்துறையினரே எரிக்கும் காட்சி வைரலாக இப்பொழுது பரவிவருகிறது.

எனினும், மாணவர்கள் வன்முறைகளில் ஈடுபடவில்லை என காவல்த்துறை இப்பொழுது சொல்கிறது.

எனில், எதற்காக மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பதற்கான தகவல்களை இப்பொழுது தான் எதிர்க் கட்சிகள், ஊடகங்கள் வெளிக்கொண்டுவரத் தொடங்கியிருக்கின்றன.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் 1965இற்குப் பின்னர் மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து மிகப்பெரும் ஒரு போராட்டத்தை 2017ம் ஆண்டு, தை மாதம் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

வரலாற்றில் அது இடம்பிடித்தும் விட்டது. எனினும், இதேபோன்றதொரு போராட்டத்தை தன்னெழுச்சியாக மாணவர்கள் ஏற்படுத்தக் கூடாது. அப்படி ஏற்பட்டால் இன்று நிகழ்ந்தது போன்றே நாளையும் நிகழும் என்ற எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்கள்.

அறவழிக்கு முக்கியத்துவம் கொடுத்து, காவல்த்துறையினரோடு அன்பு பாராட்டிய மாணவர்களை, இவர்கள் தங்கள் வன்கரங்கள் கொண்டு அடக்கியதற்கான மிக முக்கியமான காரணம் இது தான்.

இதனை மேலும் உறுதிப்படுத்துவதாக சென்னை மெரீனாக் கடற்கரையில் இனிவரும் காலங்களில் போராட்டங்கள் நடைபெறுவதற்கு தடை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு அறவழியான போராட்டத்தைக் கூட வன்முறைப் போராட்டமாக மாற்றிய பெருமை தமிழக காவல்த்துறையினருக்குத் சேரும்.

ஆனாலும், ஆளும் அதிகார வர்க்கங்கள் தங்கள் ஆட்சிக்கும், அதிகாரங்களுக்கும் இளைய தலைமுறையினர் வேட்டு வைப்பார்கள் என்ற மிகப்பெரிய பயத்தின் வெளிப்பாட்டை வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு அடக்கியிருக்கிறார்கள்.

ஆனால், இதற்கு தாங்கள் அஞ்சப்போவதில்லை என்றும். மீண்டும் தமக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க கூடுவோம். தமிழன் இழந்த உரிமைகளை மீட்க களம் அமைப்போம் என்கிறார்கள் அதே திமிரான உற்சாகமான வார்த்தைகளோடு.

http://www.visarnews.com/2017/01/blog-post_505.html