25 3 2022

ல்விவ் பகுதியில் இது பவுடர் டவர் என்று அழைக்கப்படுகிறது. 16ம் நூற்றாண்டில் துப்பாக்கி தோட்டாக்களுக்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளையும், ஆயுதங்களையும் சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டது. பிறகு அது கட்டுமான கலைக்கான அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. ஆனால் போர் ஆரம்பமான அன்றே இந்த கோட்டையை தன்னார்வலர்கள் கைப்பற்றியுள்ளனர்.
அப்போது இருந்து இந்த பகுதிக்கு வந்த நூற்றுக்கணக்கான மக்கள் நன்கொடையாக வழங்கப்பட்ட ஆடைகளை கிழித்து ஒரு பாதுகாப்பு வலையை இந்த கோட்டையை சுற்றி உருவாக்கி வருகின்றனர்.
உக்ரைன் இறுதிவரை போராட வேண்டும், உக்ரைன் அதன் சுதந்திரத்திற்காக போராட வேண்டும்” என்று தன்னார்வலர்களின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் 23 வயதான ஒலெக்ஸாண்ட்ரா பிலோகூர் கூறுகிறார்.
நாங்கள் வலுவான நோக்கத்தைக் கொண்டிருக்கின்றோம் என்பதால் இந்த போரில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களால் இந்த நாட்டில் இருக்கும் எப்பகுதியையும் விட்டுக்கொடுக்க இயலாது ஏன் என்றால் இது எங்களின் நிலம், எங்களில் வீடு இது. இதனை நாங்கள் பாதுகாக்க வேண்டும். இதனை பாதுகாக்க நமது வீரர்கள் உயிரிழந்துள்ளனர் எனவே அரசு இதில் ஏதேனும் சலுகை காட்டினாலும் அது துரோகம் என்றும் குறிப்பிட்டார் ஒலெக்ஸாண்ட்ரா.

பிலோகூரின் வாதத்தையே அங்குள்ள பல மக்களும் பிரதிபலிக்கின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு ரஷ்யா, உக்ரைனுக்குள் படையெடுப்பை துவங்கிய போது, ஒரு சிலர் உக்ரைன் ராணுவம், ரஷ்யாவின் மேம்படுத்தப்பட்ட ராணுவ தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்களுக்கு எதிராக திறம்பட செயல்பட்டு, ரஷ்யாவின் முயற்சிகளை முறியடிக்கும் என்று எதிர்பார்த்தனர்.
தற்போது லிவிவ் நகரில் உள்ளூர் அதிகாரிகளைக் காட்டிலும், இந்த போரில் போராட அதிகமாக தன்னார்வலர்கள் உள்ளனர் என்று குறிப்பிடுகின்றனர்.
ரஷ்ய ஆக்கிரமிப்பால் பெரிதும் பாதிக்கப்படாத இந்த மாகாணத்தில் 30,000 க்கும் மேற்பட்டோர் ஆயுதப் படைகளில் சேர்ந்துள்ளனர், மேலும் 20,000 பேர் பிராந்திய பாதுகாப்புப் படையில் சேர முன்வந்துள்ளனர் என்று லிவிவ் மாகாண இராணுவ நிர்வாகத்தின் தலைவர் மக்ஸிம் கொஸிட்ஸ்கி தெரிவித்துள்ளார். .

இதுவரை 15800 ரஷ்ய வீரர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 108 ரஷ்ய ஜெட் விமானங்கள், 124 ஹெலிகாப்டர்கள், 530 தாங்கிகள் மற்றும் 1567 ஆயுதம் தாங்கிய வாகனங்களை உக்ரைன் படையினர் அழித்துள்ளனர் என்று உக்ரைன் நிர்வாகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. அதே நிலையில் உக்ரைன் எவ்வளவு வீரர்களை இழந்துள்ளது என்று இன்னும் குறிப்பிடவில்லை. 10 ரஷ்யர்களுக்கு ஒரு உக்ரேனியர் என்ற விதத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் சர்வதேச உதவியை நம்புகின்றோம். அதைக் காட்டிலும் அதிகமாக உக்ரைன் ராணுவத்தை நம்புகிறோம். அவர்கள் நேட்டோவை நம்புவதால் அல்ல, மாறாக அவர்கள் தங்கள் நிலத்தை நம்புவதால் நாங்கள் அவர்களை நம்புகின்றோம். எங்களுக்காக மற்ற யாரும் போரடவில்லை அந்த வீரர்கள் தான் போராடுகிறார்கள் என்றும் கோஸிட்ஸ்கி தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்தும் ஆயுதங்கள் வருகின்றன. நாங்கள் அதனை பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றோம். தன்னார்வலர்களும் தயார் நிலையில் இருக்கின்றனர். எங்களின் வெற்றியை விரைவில் உறுதி செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கிழக்கு உக்ரைனில் அமைந்திருக்கும் கார்கிவ் பகுதியைச் சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க இசைக் கலைஞர் விளாடிமிர் வாண்டராஸ் படையில் சேர்வதற்கு தயார் நிலையில் உள்ளார். போரின் துவக்கத்திலேயே இவரின் நகரம் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் அங்கே இருந்து தன்னுடைய குடும்பத்துடன் தப்பித்து வந்த விளாடிமிர் வாண்டராஸ் தன்னுடைய மனைவியை ஜெர்மனிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இராணுவச் சட்டத்தின் காரணமாக அவரால் வெளியேற முடியவில்லை.

ரஷ்ய அதிபர் அமைதி வேண்டும் என்று கூறினார். உக்ரைனை நேசிப்பதாகவும், உக்ரேனியர்கள் தன்னுடைய சகோதரர்கள் என்றும் கூறிக் கொண்டார். ஆனால் அவர் தான் இறுதியில் இங்கே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர் அவர் தான்.
1991 இல் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு சோவியத் கால உக்ரைனை வாண்டேராஸ் அனுபவித்திருக்கிறார். “தற்போது இது ஜனநாயக நாடு. மக்களுக்கு அதிபரை பிடிக்கவில்லை என்றால் உடனே மாற்றிக் கொள்ளலாம். தங்களின் உரிமைகளை கோரும் சுதந்திரம் இந்த மண்ணில் உள்ளது. ஆனால் ரஷ்யாவில் அனைவரும் புடினின் பேச்சை கேட்க வேண்டும்” என்றும்ம் தெரிவித்தார் வாண்டேராஸ்.

புடினின் கோரிக்கைகளை உக்ரைன் மக்களால் ஏற்க இயலாஅது. எங்களின் விருப்பத்தின் படி இந்த போர் முடிவுக்கு வர வேண்டும். க்ரீமியா உட்பட எங்களின் பிராந்தியங்களில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டும். ஒரு வேளை ரஷ்யா இதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நாங்கள் தொடர்ந்து போராட தயார் என்றும் அவர் கூறினார்.
48 வயதான க்ராவ்சுக் கிராஸ்வான், கெர்சனைச் சேர்ந்த உக்ரேனிய இராணுவத்தில் ஒரு மதகுருவாக உள்ளார். உக்ரைன் போரில் வெற்றிபெற முடியும் என்று நம்புகிறீர்களா என்று கேட்டதற்கு, “நிச்சயமாக” நம்பிக்கையுடன் பதில் அளிக்கிறார்.
பாதுகாப்பிற்காக நாட்டை விட்டு வெளியேற மக்கள் கூட உக்ரைன் சரணடையக் கூடாது என்று விரும்புகின்றனர். தலைநகர் கிவ்வில் தன்னுடைய கணவரையும், வீட்டையும் விட்டு, வார்சாவில் இருந்து தன்னுடைய குழந்தைகளுடன் ஜெர்மனிக்கு செல்லும் ஸ்வெட்லானா வாசிலென்கோ, உக்ரைன் எங்களின் சுதந்திரத்திற்காக போராடி அதில் வெற்றி பெறும் என்று கூறினார்.
தன்னுடைய கணவர் போரில் ஈடுபட்டு வருவதாகவும், மக்கள், குறிப்பாக குழந்தைகள் இறப்பதை விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதையே தான் ல்விவின் மேயர் ஆண்ட்ரி சதோவ்யியும் கூறுகிறார்.
உக்ரேனியர்களாக, ஒரு அரசாகவும், தேசமாகவும், அடுத்த நூறு ஆண்டுகள் நிம்மதியாக வாழ்வதற்கான கடைசி வாய்ப்பை கடவுள் நமக்கு அளித்துள்ளார். எதிரிகளை விரட்டியடித்த தங்கள் முன்னோர்களைப் பற்றி உக்ரேனியர்கள் அன்று பெருமைப்படுவார்கள் என்று அவர் கூறுகிறார்.
போர் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் உங்களை மிகவும் பாதித்த நிகழ்வு எது என்று கேட்ட போது, கடந்த வாரம் அங்கே உருவாக்கப்பட்ட ஒரு நினைவு சின்னத்தை காட்டினார். குழந்தைகளை வைத்து செல்லும் 108 தள்ளு வண்டிகள் அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றும், போரில் பலியான சின்னஞ்சிறு குழந்தைகளின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. ”இன்று வரை 117 குழந்தைகள் சொர்க்கத்தில் இருந்து எங்களை பாதுகாத்து வருகின்றனர்” என்று அவர் மனம் உடைந்து பேசினார்.
source https://tamil.indianexpress.com/international/month-into-war-a-message-from-16th-century-tower-will-fight-till-the-end-430301/