செவ்வாய், 29 மார்ச், 2022

சென்னை திரும்பினார் ஸ்டாலின்: என்னென்ன துறைகளில் தொழில் முதலீடு என பேட்டி

 29 3 2022 

நான் பணத்தை அல்ல, தமிழக மக்களின் மனங்களை எடுத்துக் கொண்டு துபாய் வந்திருக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று திரும்பினார்.

முன்னதாக, அபுதாபியில் இந்திய சமூக கலாசார மையம் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் சமூகம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

எனது இந்தப் பயணத்தை தமிழகத்தில் உள்ள அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பயணம் வெற்றி அடைந்துவிட்டதே என கருதிய சிலர், அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

நான் பணத்தை எடுத்துக் கொண்டு இங்கு வந்திருப்பதாக கூறுகின்றனர். நான் அரசியல் பேசுவதாக நீங்கள் நினைக்கக் கூடாது. நான் பணத்தை எடுத்துக் கொண்டு வரவில்லை.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களின் மனங்களை தான் எடுத்து வந்திருக்கிறேன். அது தான் உண்மை. எங்கிருந்தாலும் தமிழர்களின் உள்ளத்தில், தமிழர்களுடன் இருக்கிறோம் என்பது தான் எனக்கு முக்கியம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் ரூ.5,000 கோடி எடுத்துக் கொண்டு துபாய் சென்றதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். முதல்வர் குடும்பத்துடன் பயணம் சென்று ஏன் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்படி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

என்னென்ன துறைகளில் முதலீடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், ஜவுளித் துறை சார்ந்த ஒயிட் ஹவுஸ் நிறுவனத்துடன் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உணவு துறை சார்ந்த நிறுவனத்துடனும், மருத்துவத் துறை சார்ந்த நிறுவனத்துடனும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சரக்கு போக்குவரத்து நிறுவனத்துடன் ரூ.500 கோடி மதிப்பிலான ஒப்பந்தமும், உணவு பதப்படுத்தல் நிறுவனமான லுலு நிறுவனத்துடன் ரூ.3,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொத்தம் 6 நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று முதல்வர் தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/did-not-bring-money-i-brought-to-the-minds-of-the-people-cm-stalin-speech-in-abu-dhabi-432155/