வியாழன், 31 மார்ச், 2022

விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்

 31 3 2022 

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து 107 ரூபாய் 45 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலையும் 76 காசுகள் உயர்ந்து 97 ரூபாய் 52 காசுகளுக்கு விற்பனையாகிறது. இது போல், பிற மாநிலங்களிளும் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் 3 கட்ட பரப்புரையை தொடங்கியுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 7 வரை நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, அவர்கள் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, கடந்த 10 நாட்களில் 9 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர், எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.

source https://news7tamil.live/congress-mps-protest-against-rising-prices.html