திங்கள், 21 மார்ச், 2022

ஹிஜாப் தடை ஏமாற்றம் அளிக்கிறது! அமெரிக்க வெள்ளை மாளிகையின் வெளியுறவுத்துறை குழு தலைவர் கருத்து

 17 3 2022 

வாஷிங்டன்: கர்நாடகத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டுள்ள தடையை அம்மாநில உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் வெளியுறவுத்துறை குழு தலைவர் கிரிகோரி மீக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து கல்லூரி செல்வதற்கான பிரச்சனை வெடித்தது. அந்த மாநிலங்களின் பல பகுதிகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பெரும் விவாதப்பொருளாகி சர்ச்சைகளை உருவாக்கியது. கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவிகள் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு இந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளதாக மாணவிகள் கூறி வருகின்றனர். அமெரிக்கா கருத்து இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து அமெரிக்கா தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் வெளியுறவுத்துறை குழு தலைவர் கிரிகோரி மீக்ஸ் கூறுகையில், "மதம் மற்றும் கல்விக்கான உரிமை ஆகியவற்றிற்கு இடையே கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது. இது ஏமாற்றமளிக்கிறது. அமெரிக்கா, இந்தியா உள்பட எந்த நாடாக இருந்தாலும் சிறுபான்மை சமூகங்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதை பொறுத்தே ஒரு சமூகத்தின் உண்மையான அளவுகோல் மதிப்பிடப்படுகிறது'' என வருத்தம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சம்மன் முன்னதாக ஹிஜாப் தொடர்பான பிரச்சனையில் பாகிஸ்தான் தலையீட்டதற்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்தது. அதாவது ‛‛கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டு இருப்பது கண்டனத்துக்குரியது. இந்தியாவில் முஸ்லிம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்'' எனக்கூறி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியது. இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அதாவது இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வெளிநாடுகளுக்கு உரிமையில்லை எனக்கூறியிருந்தது. இந்நிலையில் தான் தற்போது அமெரிக்காவில் இருந்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடு - பந்த் இதற்கிடையே கர்நாடக உயர்நீதிமன்றம் உறுதி செய்த ஹிஜாப் தடையை எதிர்த்து மாணவிகள் தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஹோலி விடுப்புக்கு பின் இதன் மீது விசாரணை நடத்தப்பட உள்ளது. மேலும், ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் எனக்கூறி இன்று கர்நாடகத்தில் முஸ்லிம் அமைப்பினர் முழுஅடைப்பு போராட்டத்துக்கு(பந்த்) அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து மாநிலத்தின் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.oneindia.com/news/washington/hijab-ban-gregory-meeks-us-house-foreign-affairs-committee-chairperson-disappointing/articlecontent-pf666729-452053.html