செவ்வாய், 2 ஜூலை, 2024

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ஜூலை 5, 6-ம் தேதிகளில் போராட்டம் - தி.மு.க வழக்கறிஞர் அணி

 இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 சட்டங்களையும் முறையே, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷிய அதிநியம் என்ற பெயரில் புதிய குற்றவியல் சட்டங்களாக நாடளுமன்றத்தில்நிறைவேற்றப்பட்டு, இன்று ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கும் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும், பல்வேறு அரசியல் தலைவர்களும், செயல்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க வழக்கறிஞர் அணி சார்பில், ஜூலை 5-ம் தேதி மாவட்ட நீதிமன்றங்களில் வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 6-ம் தேதி தி.மு.க வழக்கறிஞர் அணி சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சட்டத்துறைச் செயலாளர், மூத்த வழக்கறிஞர் என்ஆர்.இளங்கோ எம்.பி தலைமையில், சட்டத்துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை முன்னிலையில் ஜூன் 29-ம் தேதி திமுக சட்டத்துறை மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து ஜூலை 5-ம் தேதி மாவட்ட நீதிமன்றங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துதல், தி.மு.க சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி தலைமையில் ஜூலை 6-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துதல், மாநில முழுவதும் கண்டன கருத்தரங்குகள் நடத்துதல் உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க சட்டத்துறை நிறைவேற்றிய 3 தீர்மானங்கள்: 

தீர்மானம் -1: வரும் ஜூலை 5ஆம் தேதி காலை 10 மணி அளவில் திமுக மாவட்ட கழகங்கள் ஒன்றிணைந்து, மாவட்ட நீதிமன்றங்களின் வாயில் முன்பாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களையும் ஒன்றிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வெளிப்படுத்தும் கண்டன முழக்கம் கேளா காதுகளாய் இருக்கும் மத்திய அரசை தட்டி எழுப்பக் கூடியதாக இருக்க வேண்டும். 

தீர்மானம் -2: திமுக சட்டத்துறைச் செயலாளர், மூத்த வழக்கறிஞர் என்ஆர்.இளங்கோ, எம்.பி தலைமையில், சட்டத்துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை முன்னிலையில், வரும் 6ஆம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை குற்றவியல் சட்டங்களை எதிர்த்து எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் உண்ணா விரதப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து வழக்கறிஞர் சங்கங்கள் திரளாக பங்கேற்று உண்ணாவிரத பேராட்டத்தை வெற்றி அடைய செய்து, நம்முடைய கண்டன குரலை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

தீர்மானம் -3: மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களின் பாதகங்களை வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அறிந்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கண்டன கருத்தரங்கங்கள் நடத்துவது. இந்த கருத்தரங்கத்தில் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து வழக்கறிஞர்களும் பங்கு எடுத்துக் கொள்ள கூடிய வகையில் அரங்க கூட்டங்களை ஏற்பாடு செய்து அதில் பொதுமக்களையும் பெருமளவில் கலந்து கொள்ள செய்வது என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானங்கள்படி, மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க வழக்கறிஞர் அணி சார்பில், ஜூலை 5-ம் தேதி மாவட்ட நீதிமன்றங்களில் வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் ஜூலை 6-ம் தேதி தி.மு.க வழக்கறிஞர் அணி சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-advocates-wing-announced-protest-against-three-new-criminal-laws-of-centre-4789784